'அவரே திருடிட்டு அத ஓப்பனா வேற சொல்றாரு'... 'உதயநிதி மீது இப்படி ஒரு விசித்திர புகாரா'?... பரபரப்பை கிளப்பியுள்ள பாஜக நிர்வாகி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உதயநிதி ஸ்டாலின் மீது பாஜக நிர்வாகி கொடுத்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக தேர்தல் நெருங்கும் நிலையில், தலைவர்கள் பலரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விளாத்திகுளத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். மதுரையில் 3 ஆண்டுகளுக்கு முன் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்தார்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அதைக் கையோடு எடுத்து வந்துவிட்டேன்.

மதுரையில் அதிமுகவும், பாஜகவும் கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான்” எனக் கூறி ஒரு செங்கல்லை எடுத்துக்காட்டினார். மேலும் இது தான் அவர்கள் கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை என்று கேலி செய்தார். உதயநிதி ஸ்டாலின் செங்கல்லைக் காண்பித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திலிருந்த செங்கல்லை உதயநிதி ஸ்டாலின் திருடியதாக அவர் மீது பாஜக நிர்வாகி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாஜக நிர்வாகி நீதி பாண்டியன் விளாத்திகுளம் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், ''மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காகப் பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களால் கடந்த 27.01.2019ம் தேதியில் அடிக்கல் நாட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 01.12.2020ம் தேதியன்று பூமி பூஜையுடன் எய்ம்ஸ்ம மருத்துவமனைக்குத் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 5.50 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சொத்தின் பாதுகாப்பிற்காகக் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுச் சுவர் வளாகத்திற்குள் இருந்து செங்கல்லை திமுக-வின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருடிக் கொண்டு வந்துள்ளார். 

இந்த உண்மையை அவரே நேற்று (25.03.2021) விளாத்திகுளம் பேருந்து நிலையத்திற்கு முன்பு நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஒத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் தான் திருடிக் கொண்டு வந்த அந்த செங்கல்லையும் அங்கே கூடியிருந்த பொது மக்களிடத்தில் எடுத்துக் காண்பித்துள்ளார். அவரின் இத்தகையைச் செயல் இந்தியத் தண்டனை சட்டம் பிரிவு 380ன் படி தண்டிக்கத் தக்க குற்றச் செயலாகும்.

ஆகவே சமூகம் காவல் ஆய்வாளர் அவர்கள் இப்புகார் மனு மீது விசாரணை செய்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காகக் கட்டப்பட்ட சுற்றுச் சுவர் வளாகத்திற்குள் இருந்து செங்கல்லை திருடிக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் அதனை விளாத்திகுளத்தில் வைத்து ஒப்புக்கொள்ளவும் செய்துள்ளார். 

அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவர் திருடி வந்த செங்கல்லைக் கைபற்றி சட்டப்படி தண்டனை பெற்றுத் தந்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகி அளித்துள்ள விசித்திர புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்