‘உலகமே கொரோனா தொற்றுக்கு அழிஞ்சிட்டு இருக்கு.. ஆனா இந்த சாதிவெறியர்களின் வன்மம் மட்டும் அடங்குவதாய் இல்லை’!.. கொதித்த பா.ரஞ்சித்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊர் பஞ்சாயத்தில் பட்டியலினத்தை சேர்ந்த 3 பெரியவர்களை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒட்டனந்தல் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் பட்டியலின இளைஞர்கள் ஊரடங்கை மீறி திருவிழா நடத்தியாதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது வாகனத்தில் இருந்தபடி இளைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். இதனால் இசைக்குழுவினரின் உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இளைஞர்கள் செய்த தவறுக்காக தாங்கள் மன்னிப்பு கேட்பதாக கூறி, காவல் நிலையத்தில் அப்பகுதி பெரியவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு ஊர் திரும்பியுள்ளனர்.

இதனிடையே கூட்டப்பட்ட கிராம பஞ்சாயத்தில், ஊர் விதிகளை மீறியதாக பட்டியல் சமூக மக்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மூன்று பெரியவர்களை அழைத்து, பிற சமூக மக்களின் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்ட வைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அக்கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கொரோனாவுக்கு எதிராக உலகமே போராடி வரும் சூழ்நிலையில், பட்டியலின மக்களை காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்