‘கணக்குல அதிக மார்க் வாங்கணும்’.. 1 ம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய டியூசன் டீச்சர்..! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நன்றாக படிக்கவில்லை எனக்கூறி 1 -ம் வகுப்பு மாணவியை டியூசன் டீச்சர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கை, முதுகில் காயத்துடன் பள்ளி மாணவியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதில் கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல்புரம் என குறிப்பிட்டு இருந்துள்ளது. இதனை அடுத்து அந்த புகைப்படம் குறித்து விசாரிக்குமாறு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் புகைப்படத்தில் இருந்த மாணவி படுவாக்கரையைச் சேர்ந்தவர் என்பதும், அவர் பெத்தேல்புரத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை காலாண்டு தேர்வு எழுத வந்த மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்ததாகவும், பரிசோதித்துப் பார்த்ததில் மாணவியின் உடம்பில் காயங்கள் இருந்ததும் தெரியவந்தது என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கொண்டு மாணவியிடம் நடத்திய விசாரணையில் அதிக மதிப்பெண் எடுக்க வலியுறுத்தி டியூசன் டீச்சர் ஜெசிமோள் என்பவர் அடித்ததாக கூறியுள்ளார். இதனை அடுத்து டியூசன் டீச்சரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாணவி கணக்கு பாடத்தில் குறைவான மதிப்பெண் பெறுவதாகவும், அதனால் மாணவியின் பெற்றோர் தன்னிடம் டியூசன் படிக்க அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவி சரியாக படிக்கததால் கரண்டி, பிரம்பால் தாக்கியதாகவும், அதனால் மாணவி காயமடைந்ததாகவும் ஜெசிமோள் தெரிவித்துள்ளார். இதனை மறைக்கவே தன்னுடைய வீட்டிலேயே மாணவியை தங்கவைத்து காலையில் பள்ளிக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து டியூசன் டீச்சர் ஜெசிமோளின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிக மதிப்பெண் பெற வேண்டி 1 -ம் மாணவி டியூசன் டீச்சரால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TUITION, TEACHER, ARRESTED, ATTACKED, KANYAKUMARI, SCHOOL, GIRL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்