என்ன தாத்தா...! 'ஏடிஎம்' கார்டு 'எக்ஸ்பயரி' ஆனது கூட தெரியாம இருக்கீங்க...! 'சரி நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்...' - நூதன மோசடி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வங்கிக் கணக்கிலிருந்து கிட்டத்தட்ட 17 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பீமநகர் கண்டித்தெருவைச் சேர்ந்த 82 வயதான ராமகிருஷ்ணன் அரசு ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் பாலக்கரை பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளை வங்கியில் 1990ஆம் ஆண்டு சேமிப்பு கணக்கு தொடங்கி தற்போது வரை சுமார் 32 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவரது செல்போனுக்கு கடந்த 3-ம் தேதி ஒருவர் போன் செய்து, தான் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து பேசுவதாகவும், ராமகிருஷ்ணனின் ஏடிஎம் கார்டு காலாவதி ஆகி விட்டதால் அதனை புதுப்பிக்குமாறும் முதியவரிடம் கூறியுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த ராமகிருஷ்ணன், காலாவதி ஆகிவிட்டதே என்ற பயத்தால் அந்த நபர் கேட்ட ஏடிஎம் கார்டு நம்பரையும், செல்போனுக்கு ஓடிபி எண்ணையும் கூறியுள்ளார். இதுபோல் மூன்று முறை OTP எண்ணைப் பெற்றவுடன் தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார்.

அதன்பின் ராமகிருஷ்ணனின் வங்கிக் கணக்கில் இருந்து 20 ஆயிரம் பணம் எடுத்த SMS வந்துள்ளது. பதறிப்போன ராமகிருஷ்ணன் தன் பேரன் கிருபாகரனுக்கு தொலைபேசி மூலம்  கூறியதையடுத்து, அவர் உடனடியாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை இ-மெயிலுக்கு தனது தாத்தா ராமகிருஷ்ணன் வங்கிக் கணக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாக புகார் செய்தி அனுப்பியுள்ளார்.

அதன்பின் எந்த ஒரு குறுஞ்செய்தியும் ராமகிருஷ்ணனுக்கு வரவில்லை. இந்நிலையில் கடந்த 8-ம் தேதி பாலக்கரையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளரை சந்தித்து, தனது வங்கிக் கணக்கில் 259 ரூபாய் மட்டுமே இருப்பதாக மேலாளர் மூலம் அறிந்த ராமகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார்.

அப்போது தான் அந்த மர்ம நபர்கள் குறுஞ்செய்தி தகவலை பிளாக் செய்து, ராமகிருஷ்ணனின் வங்கி கணக்கில் இருந்து 10 ஆயிரம் மற்றும் 20 ஆயிரம் என 17 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது.

மேலும் இந்த சம்பவம் குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்