அமுதா ஐஏஎஸ் வெளியிட்ட ஆடியோ.. ‘பறந்த வார்னிங்’.. ஊராட்சி மன்ற தலைவர்கள் கலக்கம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை : அமுதா ஐஏஎஸ் வெளிட்ட ஆடியோவில், தமிழகத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஊராட்சியில் உள்ள ஏரி மற்றும் குளங்களை மீன் குத்தகைக்குத் தன்னிச்சையாக விடுவது சட்ட விரோதமானது என  எச்சரித்துள்ளார்

Advertising
>
Advertising

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக மத்திய அரசின் பணியில் இருந்த அமுதா ஐஏஎஸ், அண்மையில் மாநில பணிக்குத் திரும்பினார். அமுதாவிற்கு மிக முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது. எதிர்பார்த்தபடியே தமிழக ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளராக அமுதா நியமிக்கப்பட்டார்.

இதனிடையே வடகிழக்கு பருவமழையால் வெள்ளக்காடாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மாறியதால் தாம்பரம் மற்றும் சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு மாவட்ட நிவாரண பணிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு அமுதா ஐஏஎஸ்சிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. உடனடியாக களத்தில் இறங்கிய இவர், சென்னை புறநகர் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நேரடியாக ஆய்வு செய்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உத்தரவிட்டார். ஏற்கனவே அடையாறு ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை சரி செய்தவர் என்பதால் இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த பொறுப்புகளுக்கு மத்தியில் தனது ஊரக வளர்ச்சி துறையின் பணிகளையும் கவனித்து வருகிறார்.

அவர் வெளிட்ட ஆடியோவில், தமிழகத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஊராட்சியில் உள்ள ஏரி மற்றும் குளங்களை மீன் குத்தகைக்குத் தன்னிச்சையாக விடுவது சட்ட விரோதமானது என  எச்சரித்துள்ளார்.

அமுதா ஐஏஏஸ் அண்மையில் வெளியிட்டுள்ள ஆடியோவில், “அனைத்து ஊராட்சி செயலர்கள், பொறியாளர்களுக்கு வணக்கம்.. தற்போது பல ஊராட்சிகளில் உள்ள ஏரிகளை மீன் குத்தகைக்கு ஊருக்குள் பேசி ஏலம் விடப்படும் நடைமுறை இருக்கிறது. இது ஒரு தவறான முன்னுதாரணம். ஏரி, குளங்களை ஏலம் விட வேண்டும் என்றால் முதலில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதற்குரிய அலுவலர்கள் முன்னிலையில் தான் ஏலம் நடைபெற வேண்டும். அந்த ஏல தொகையும் அரசு அலுவலகத்தில் தான் கட்ட வேண்டும்.

ஏரியை ஒரு லட்ச ரூபாய்க்கு ஏலம் விடுத்துவிட்டு, அலுவலகத்தில் பெயருக்கு 20 ஆயிரம் மட்டும் செலுத்தும் நடைமுறை இருக்கிறது. இதர தொகையை வேறு செலவுகளாகக் கணக்கு காண்பிப்பது தவறான ஒரு நடைமுறை. இனிமேல் இதுபோன்ற நடைமுறை எதாவது பஞ்சாயத்தில் நடப்பது உறுதியானால், ஏலம் விட்டவர்கள், ஏலம் எடுத்தவர்கள், அதற்குத் துணையாக இருந்தவர்கள் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏரிகளை ஏலம் விடுவது தொடர்பாக இதுவரை அலுவலகங்களில் இருந்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் இதற்கு முன் ஏரி எதாவது ஏலம் விடப்பட்டிருந்தால் அது செல்லாது. அப்படி நடந்தால் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது முக்கிய பிரச்சினை. அனைவரும் இதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும். புதிய ஊராட்சி மன்றம் சார்பில் குளங்களுக்கு வேண்டுமானால் ஏலம் விடலாம். ஆனால், ஏரிக்கு அவர்களால் எதுவும் செய்ய முடியாது. யாரும் ஏரியை உரிமை கொண்டாட முடியாது. ஏரியின் கட்டுப்பாடுகள் அனைத்தும் அரசு அலுவலகங்களிடம் தான் உள்ளது.

மேலும், தண்ணீர் செல்வதாகக் கூறி சில பகுதிகளில் பொதுமக்களே ஏரியை உடைத்துவிடுவதாகவும் புகார்கள் வருகிறது. இதுபோன்ற நடவடிக்கையிலும் யாரும் ஈடுபடக் கூடாது. அப்படி யாராவது செய்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் அந்த ஆடியோ பதிவில் எச்சரித்துள்ளார்.

LAKE, AMUTHAIAS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்