'என்ன மக்களே, மாஸ்க் வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டோமா'?... 'தமிழகத்தில் ஒரே வாரத்தில் அதிர்ச்சி அளித்த ரிப்போர்ட்'... அலட்சியம் காரணமா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் பொது முடக்கம், சாலைகள் மூடல், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ், தொழில் நிறுவனங்கள் மூடல் என கொரோனா காரணமாக மக்கள் சந்தித்த இன்னல்கள் கொஞ்ச நஞ்ச மல்ல. ஆனாலும் அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாகத் தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் வந்தது. இருப்பினும் தொற்று என்பது முழுமையாகக் குறையவில்லை.

ஆனால் மக்கள் தீவிரமாகக் கடைப்பிடித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது. கடந்த ஜனவரி முதல் வாரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 800 என்ற அளவிலிருந்து குறையத் தொடங்கி, சில வாரங்களில் 300 என்ற அளவில் குறைந்தது. ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை.

அதற்கு அடுத்தடுத்த நாட்களில் 400, 500 என அதிகரித்தது வந்த பாதிப்பு, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 759 பேருக்குத் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரை கூட்டங்கள், திருமணம், துக்க நிகழ்வுகள் போன்ற இடங்களில் கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்கவிட்டு மக்கள் அதிகளவில் கூடியதே தொற்று அதிகரிப்புக்குக் காரணங்களாகப் பார்க்கப்படுகிறது. தஞ்சை அருகே ஒரே பள்ளியில் 56 மாணவர்களுக்கு ஒரேநேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இது மக்களிடையே நிலவிய கொரோனா குறித்த அச்சம் விலகி, அஜாக்கிரதையாக இருந்ததே காரணம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். கடந்த ஆண்டு பொது முடக்கம் காரணமாக மக்கள் சந்தித்த இன்னல்களை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. எனவே கொரோனா கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் மீண்டும் ஒரு பொது முடக்கத்தை எதிர்கொள்ளும் சூழலைச் சந்திக்க நேரிடலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்