‘இன்று முதல் அமலுக்கு வந்த முழு ஊரடங்கு’!.. காய்கறி, மளிகை கடை எத்தனை மணி வரை திறந்திருக்கும்..? எதற்கெல்லாம் அனுமதி கிடையாது..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், எதற்கெல்லாம் அனுமதி, எதற்கெல்லாம் அனுமதி கிடையாது என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும், இன்று (10.05.2021) முதல் மே 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 4 மணி முதலே ஊரடங்கு தொடங்கியுள்ளது. இந்த முழு ஊரடங்கு காலகட்டத்தில் என்னென்ன இயங்கும்?, என்னென்ன இயங்காது? என்பது குறித்து தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

முழு ஊரடங்கின்போது இயங்குபவை:

1. தனித்து இயங்கும் மளிகை, பலசரக்கு, காய்கறி, பூ விற்பனை, இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்கள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி.

2. பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி.

3. நியாய விலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.

4. தன்னார்வலர்கள், வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், நோயுற்றவர்களுக்கான சேவை வழங்குபவர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை அல்லது ஆவணங்களுடன் சென்று வர அனுமதி.

5. உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி. மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

6. நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்படும்.

7. நடைபெற்றுவரும் கட்டடப் பணிகளுக்கு அனுமதி.

8. ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்.

9. திருமணம் / திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்துகொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 20 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும், அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை.

10. தொலைத்தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகளுக்கு அனுமதி.

11. தரவு மையங்களில் பராமரிப்பு பணி, மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசிய பணிகள், தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

12. கிடங்குகளில் சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதி.

13. முழு ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்படாத தொழில் நிறுவனங்களில், இயந்திரம் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி.

14. இரயில் நிலையங்களிலும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதி.

15. அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.

16. வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவன சேவைகள் அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும்.

17. இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் அக்கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊடங்கின்போது இயங்காதவை:

1. மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2. திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கும், மருத்துவமனை செல்வதற்கும் உரிய ஆவணங்களுடன் பயணிப்பவர்கள் அனுமதிக்கப்படுவர். இதை தவிர வேறு எந்த போக்குவரத்தும் செயல்படாது.

3. டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு அனுமதி கிடையாது.

4. முடி திருத்தும் கடை, ப்யூட்டி பார்லர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

5. அனைத்து வழிப்பாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த அனுமதி இல்லை.

6. திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், பார்கள், பெரிய அரங்குகள், கேளிக்கை பூங்காக்கள், கூட்ட அரங்குகள் செயல்பட அனுமதி இல்லை. மேலும் உள் அரங்குகள், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

7. சுற்றுலாத் தலங்கள், கடற்கரைகள், பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், தொல்லியல் சின்னங்கள், அகழ்வைப்பகங்கள், அருங்காட்சிகங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்