‘தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்’!.. காய்கறி வாங்குவது குறித்து கவலை வேண்டாம்.. தமிழக அரசு புதிய ஏற்பாடு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் காய்கறி வாங்குவதற்கு அரசு புதிய ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், இன்று (24.05.2021) முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள இந்த ஒரு வார காலத்துக்கும் வீடுகளுக்கே சென்று காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநிலத்தின் தினசரி காய்கறி மற்றும் பழங்கள் தேவை 18 ஆயிரம் மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. 4,380 வாகனங்கள் மூலம் மக்களின் வீடுகளுக்கே சென்று அவற்றை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் தினந்தோறும் 1,160 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் 2,770 வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உள்ளாட்சித்துறை மற்றும் கூட்டுறவுத்துறையுடன் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள், அருகில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் காய்கறி மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள 044-22253884 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்