இந்திய சீன எல்லையில் வீர மரணம் அடைந்த பழனி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்!.. முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சீன ராணுவத்தின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பழனி குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

லடாக்கில் இந்திய-சீன ராணுவத்திற்கு இடையே நடந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி மற்றும் இரண்டு வீரர்கள் உள்பட 3 பேர் வீரமரணம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

லடாக்கில் நடந்த தாக்குதலில். தமிழகத்தைச் சேர்ந்த பழனி (வயது 40) வீரமரணம் அடைந்தார். இவர் ராமநாதபுரம் திருவாடானை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் இந்திய ராணுவத்தில் கடந்த 22 வருடங்களாக ஹவில்தாராக பணியாற்றி வந்தார்.

பழனிக்கு திருமணமாகி 10 வயதில் ஒரு பெண் குழந்தையும், 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். பழனியின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், பழனியின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பழனியின் உயிரிழப்பு மிகுந்த வேதனை அளிப்பதாகவும் அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பழனியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வீரமரணம் அடைந்த பழனிக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்த ராமநாதபுரம் ஆட்சியருக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்