'16 வயசு மகளையும் ஏமாத்தி கூட்டிட்டுபோனோம்'... 'கணவரும் வந்து கெஞ்சினாரு'... 'மனைவி, மகளின் காதலன் கொடுத்த'... 'அதிரவைக்கும் வாக்குமூலம்!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூரில் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில்  கைது செய்யப்பட்டுள்ள மனைவி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருப்பூரை சேர்ந்த ரவி (44) என்பவருடைய மனைவி கனகவள்ளி (35). இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி மனைவி மற்றும் மகளுடன் ஏற்பட்ட பிரச்சனையால் ரவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவருடைய செல்போனில் மரண வாக்குமூலமாக  வீடியோ ஒன்றையும் பதிவு செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அதை அனுப்பியுள்ளார். இதையடுத்து திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் இருந்த கனகவள்ளியையும், அவருடைய மகளின் காதலன் அருண்குமாரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையின்போது  கனகவள்ளி அளித்த வாக்குமூலத்தில், "எனக்கும் என் கணவர் ரவிக்கும் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சமீபமாக எனக்கு செல்போன் மூலமாக எடப்பாடியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் பழக்கமாக, அவருடன் நான் நெருக்கமாக பழகி வந்தேன். அது என் மகளுக்கு தெரிந்து விட்டதால், அதை என் கணவரிடம் சொல்லி விடுவாள் என்ற பயத்தில், அவள் அருண்குமார் என்ற  இளைஞரை காதலிக்கும் விஷயத்தை என் கணவரிடம் கூறி சமாளித்தேன். ஆனாலும் என் மகள் நான் விக்னேஷுடன் பழகும் விஷயத்தை என் கணவரிடம் கூறிவிட்டாள்.

இதனால் அடிக்கடி எனக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், என் மகளிடம் நீ காதலித்து வரும் அருண்குமாரை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் எனக் கூறி ஏமாற்றி ஈரோட்டிற்கு கூட்டி சென்றோம். இதையடுத்து என்னையும், என் மகளையும் காணவில்லை என கணவர் ரவி போலிசில் புகார் கொடுத்தார். பின்னர் போலீசார் ஈரோட்டிலுள்ள மகளிர் விடுதியில் நாங்கள் இருந்ததை கண்டுபிடித்து எங்கள் இருவரையும் அழைத்து வந்தபோது நாங்கள் என் கணவருடன் செல்ல மறுத்து, என் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறினோம்.

ஆனால் நாங்கள் அங்கு செல்லாமல் மீண்டும் ஈரோட்டிற்கு சென்று, அங்குள்ள மகளிர் விடுதியில் என் மகளை சேர்த்து விட்டு, நான் மட்டும் எடப்பாடியில் உள்ள விக்னேஷ் வீட்டிற்கு சென்றுவிட்டேன். கடந்த 24ஆம் தேதி திடீரென எனக்கு போன் செய்த என் கணவர், எங்களை பார்ப்பதற்காக ஈரோட்டிற்கு வருவதாக கூறியதால் நாங்கள் மகள் தங்கி இருந்த மகளிர் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். அப்போது அங்கு வந்த என்  கணவர் தன்னுடன் வருமாறு கெஞ்சி அழுதார். ஆனால் நாங்கள் வரமுடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டதால், அவர் அங்கிருந்து திருப்பூருக்கு சென்றுவிட்டார்.

பின்னர் போன் செய்து நானும், என் மகளும் இன்னொரு திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியதும் அவர் நான் சாகப்போகிறேன் எனக் கூறினார். அதற்கு நான் நீ செத்தால்தான் சந்தோஷம் எனக் கூறிவிட்டேன். அதன்பின்னர் என் கணவர் தற்கொலை செய்து கொண்டதாக என் மகன் என்னிடம் கூறினான். அதற்கு நான் கூறியபடிதான் செத்து போயிட்டான், அவன் சாவுக்கெல்லாம் வரமுடியாது எனக் கூறி இணைப்பை துண்டித்தேன்" எனத் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் கனகவள்ளியுடன் மீட்கப்பட்ட 16 வயது மகளை அவருடைய பாட்டியிடம் ஒப்படைத்துள்ளனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்