‘எப்டியாவது காதலனை கல்யாணம் பண்ணனும்’!.. இளம்பெண் போட்ட ‘பகீர்’ திட்டம்.. திருப்பத்தூரை அதிரவைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காதலனை கல்யாணம் பண்ண பிறந்து இரண்டு நாள்களே ஆன குழந்தையை இளம்பெண் ஒருவர் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

திருப்பத்தூர் அடுத்த சிங்காரப்பேட்டை மொசலிக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் ஷெரீப். இவரது மனைவி ரோசின் சுல்தானா. இவர் மூன்றாவது பிரசவத்துக்காக இரண்டு நாள்களுக்கு முன்பு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் பர்தா அணிந்த பெண் ஒருவர் சுல்தானா அனுமதிக்கப்பட்டிருந்த மகப்பேறு வார்டுக்குள் வந்துள்ளார்.

அப்போது சுல்தானாவிடம் பேச்சுக்கொடுத்த அந்தப் பெண், தனது அக்காவும் பிரசவத்துக்காக இதே மருத்துவமனையின் மேல் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் தனது அக்கா ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்பட்டதாகவும், அதனால் உங்கள் குழந்தையை கொஞ்ச நேரம் கொடுத்தால் தன் அக்காவிடம் காட்டிவிட்டு உடனே கொண்டுவந்து விடுவேன் என வற்புறுத்தியுள்ளார்.

இதை நம்பிய சுல்தானா, அப்பெண்ணிடம் தனது குழந்தையை கொடுத்து அனுப்பியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அப்பெண் திரும்பாததால் சந்தேகமடைந்த சுல்தானா நடந்த விஷயங்களை மருத்துவர்களிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். உடனே இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீஸில் புகார் அளித்துள்ளனர். விரைந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.

அப்போது பர்தா போட்ட பெண் குழந்தையை தூக்கி செல்வது வீடியோவில் பதிவாகியிருந்தது. மேலும் வீடியோவில் பெண்ணின் முகம் தெரிந்ததால், உடனே அப்பெண் குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். விசாரணையில் அப்பெண் திருப்பத்தூர் தேவாங்கர் நகரை சேர்ந்த நஹனா (25) என்பது தெரியவந்தது. உடனே நஹனாவின் வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது துணிகளுக்கு அடியில் குழந்தையை நஹனா மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து நஹனாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டத்தில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். அதில்,‘எனக்கு திருமணமாகி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து விட்டேன். அதன்பின்னர் நான் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. இப்போது அவருடன் வாழ்ந்து வருகிறேன்.

நான் கர்ப்பமடையாத காரணத்தால், அவர் என்னுடன் அடிக்கடி சண்டை போட்டு சேர்ந்து வாழ மறுத்தார். ஏதாவது குழந்தையை கடத்தி அதை தனது காதலனுக்குதான் பிறந்தது என நம்பவைத்தால், அவர் என்னை கல்யாணம் செய்துகொள்வார் என திட்டமிட்டேன். அதற்காக கடந்த 6 மாதங்களுக்கு மேல் கர்ப்பமாக இருப்பதாக கூறி காதலனை நம்ப வைத்து ஏமாற்றிக் கொண்டிருந்தேன். பிரசவ வலி ஏற்பட்டதாக பொய் சொல்லி மருத்துவமனைக்கு வந்தேன். பிறந்து இரண்டு நாளே ஆன குழந்தையை பார்த்ததும் கடத்தி வந்து வளர்க்க முடிவு செய்தேன்’ என நஹனா தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தை கடத்தப்பட்ட 2 மணி நேரத்துக்குள்ளாக கண்டுபிடித்த போலீசாரை எஸ்.பி விஜயகுமார் பாராட்டினார். இந்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்