'அதான் உங்க கழுத்துல 7 பவுன் செயின் இருக்குல...' 'அத கொடுங்க, நாங்க இத தரோம்...' பளபளப்பா மின்னின உடனே மனசுல ஆசை...' - கடைசியில இப்படி ஆகி போச்சே...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திண்டிவனத்தில் நூதன முறையில் வயதான முதியவரிடம் ஏழு பவுன் நகையை ஏமாற்றி வாங்கி சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் திண்டிவனத்தில் இருக்கும் உறவினர்களை பார்த்து விட்டு, நேற்று முன்தினம் இரவு (06-11-2020) சென்னை செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த 2 நபர்கள் அவரிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். அப்போது தங்களிடம் கல் பதித்த வைர நகை ஒன்று இருப்பதாகவும் அதன் மதிப்பு ரூ. 40 லட்சம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், வைர நகையின் விலை மிகவும் அதிகம் என்பதால், எங்களால் அதை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தப்படுவது போல நடித்து, கையில் வைத்திருந்த போலியான வைர நகையை முதியவரிடத்தில் காட்டியுள்ளனர். மேலும், யாராவது கொடுப்பதை கொடுத்து விட்டு வாங்கிக் கொண்டால் கூட பரவாயில்லை, விற்க தயாராக இருக்கிறோம், என்கிற மன நிலைக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதை உண்மை என நம்பிய முதியவர் நடராஜனுக்கு வைர நகையை நேரில் கண்ட உடன் மனதில் ஆசை உருவாகியுள்ளது. முதியவர் சபலப்படுவதை உணர்ந்த அந்த ரெண்டு பேரும், உங்கள் கழுத்தில் இருக்கும் தங்க சங்கிலியை கொடுத்தால் கூட நாங்கள் இந்த வைரக் கல்லை தந்து விடுகிறோம் என்று ஆசைக்காட்டியுள்ளனர். இதனால், நடராஜன் தன் கழுத்தில் அணிந்திருந்த ஏழு பவுன் தங்க மாலையை கழற்றிக் கொடுத்துள்ளார்.

நகையை வாங்கிக் கொண்ட இருவரும் அங்கிருந்து தெறித்து ஓடிவிட்டனர்.

இதன்பின்னர், அவர்கள் கொடுத்த வைர நகையை பரிசோதித்து பார்த்த நடராஜனுக்கு அது போலி நகை என்று தெரிய வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர் கதறி அழுதார். இந்த சம்பவம் தொடர்பாக திண்டிவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து தீவிரமாக வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்