'இயற்கை உபாதையை கழிக்க சென்ற இளம்பெண்ணுக்கு நடக்கவிருந்த பயங்கரம்'... 'அவன் கத்தியை பிடுங்கி'... 'ஒரே கையெழுத்தில் மாஸ் காட்டிய திருவள்ளூர் எஸ்பி'... குவியும் பாராட்டு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பலாத்காரத்திலிருந்து தற்காத்துக் கொள்ள இளைஞரைக் கொலை செய்த இளம்பெண்ணைத் திருவள்ளூர் காவல்துறை எஸ்.பி. அரவிந்தன் விடுதலை செய்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் தனது பெரியம்மா குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2-ம் தேதி இயற்கை உபாதையை கழிக்க அவர் வெளியில் சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற அஜீத்குமார் என்ற 24 வயது இளைஞர் ஒருவர், இளம்பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்துள்ளார்.

அப்போது இளம்பெண் திடுக்கிட்டுப் பார்த்தபோது அவரது கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு நின்றது வேறு யாரும் அல்ல. அந்த இளம்பெண்ணின் பெரியம்மா மகன் தான். போதையிலிருந்த அஜித் குமார், தங்கை என்றும் பாராமல் அவரது கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு இருட்டான பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளார். பின்னர் இளம்பெண் கெஞ்சிய நிலையிலும், அதைக் கண்டுகொள்ளாத அஜீத்குமார், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதையடுத்து தன்னை தற்காத்துக் கொள்ள இளம்பெண் அஜித் குமாரை ஆவேசத்துடன் தள்ளி விட்டுள்ளார். இதனால் நிலைகுலைந்த அவன், அருகிலிருந்த மரத்தில் மோதி கீழே விழுந்துள்ளான். அப்போது அஜித் குமார் வைத்திருந்த கத்தி எகிறி கீழே விழுந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இளம்பெண், கத்தியை எடுத்துத் தற்காப்புக்காக அஜித் குமாரைக் குத்தியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிய, இளம்பெண் கத்தியுடன் சோழவரம் காவல் நிலையம் வந்து நடந்ததைக் கூறி, சரணடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் அஜீத்குமாரைச் சோதித்துப் பார்த்தபோது அவர் இறந்துபோனது தெரியவந்தது. அவர் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட அஜீத்குமார் மீது திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. குடித்துவிட்டு ஊருக்குள் வம்பிழுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் இவரது மனைவி, குழந்தைகளுடன் சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுள்ளார். ஒருகட்டத்தில் வீட்டிலிருந்த தங்கை முறைகொண்ட இளம்பெண் மீது ஆசைப்பட்டு கத்திமுனையில் அவரைப் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. இளம்பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ளவே கொலையைச் செய்தது விசாரணையில் தெரியவந்தது.

உடனே நடந்த சம்பவம் குறித்து  மாவட்ட எஸ்.பி அரவிந்தனுக்கு, பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் தகவல் அளித்தார். உடனே இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட அவர், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை இளம்பெண் தற்காப்புக்காகக் கொலை செய்தார் என்ற ஐபிசி பிரிவு 100-ன் கீழ் விடுதலை செய்து திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் வெளிவந்த நிலையில், பொதுமக்கள் பலரும் திருவள்ளூர் எஸ்பியின் அதிரடி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். ''கைது செய்து ரிமாண்ட் பண்ணுங்கள். நீதிமன்றம் பார்த்துக் கொள்ளட்டும்'' என அரவிந்தன் நினைக்காமல், தற்காப்புக்காகக் கொலை செய்த பெண்ணின் பக்கம் இருக்கும் நியாயத்தையும், அவர் சரணடைந்ததையும் கருத்தில் கொண்டு,  அதற்கென உள்ள பிரிவின்கீழ்,  தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடி நடவடிக்கை எடுத்த விதம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதுகுறித்து பேட்டி அளித்துள்ள காவல்துறை எஸ்.பி. அரவிந்தன், “விசாரணையில் அஜித் என்கிற நபர் குடிபோதையில் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த முயன்றதாகத் தெரிகிறது. அவர் செய்த செயலுக்கு அவரிடமிருந்து தப்பிக்க அவரது கத்தியைப் பிடுங்கிக் கொலை செய்துள்ளார். அந்தப் பெண்ணின் மீது 302-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தாலும், சூழ்நிலை கருதி அவர் செய்த செயலை ஆய்வு செய்து அவர் தற்காப்புக்காக இந்தக் கொலையைச் செய்தார் என்கிற அடிப்படையில் பிரிவைத் திருத்தி ஐபிசி 100-ன் கீழ் அவரை விடுவித்துள்ளோம்.

அவரை விடுவித்தது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் முறைப்படி தாக்கல் செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு, குடிபோதையில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கணவனை, அவரது மனைவியே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ், இதே பிரிவின் கீழ் அந்த பெண்ணை விடுதலை செய்த சம்பவம், பலரது பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்