‘மேற்கூரை உடைஞ்சிருக்கு’.. கடைக்குள் கிடந்த ‘துண்டு சீட்டு’.. காரணத்தை எழுதிவிட்டு திருடிய திருடன்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சூப்பர் மார்கெட்டில் திருடிவிட்டு அதற்கான காரணத்தை எழுதி வைத்துவிட்டு திருடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மகன் ராம்பிரகாஷ். இவர் அப்பகுதியில் சூப்பர் மார்க்கெட் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராம்பிரகாஷ் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அடுத்த நாள் வந்த கடையை திறந்தபோது, கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே கடைக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் திருடுபோனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கடைக்குள் ஒரு துண்டு சீட்டை போலீசார் கண்டுபிடித்தினர்.

அதில், ‘நான் திருடிச்சென்றுள்ள பொருட்கள் எனது குடும்பத்திற்கு 3 மாத உணவுக்கு பயன்படும். ஆனால் இந்த பொருட்கள் உங்கள் சம்பாத்தியத்தில் ஒரு நாள் வரவு தான். எனவே ஏழ்மையில் வாழும் நான் உங்கள் கடையில் திருடியதற்கு மன்னிக்கவும்’ என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு 70 ஆயிரம் என தெரியவந்துள்ளது. இந்த நூதன திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்