'குடிபோதையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணவனை...' கள்ளக்காதலுக்காக 'பால்காரருடன்' சேர்ந்து செய்த பயங்கரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ ஆசைப்பட்ட மனைவி, அதற்கு முட்டுக்கட்டையாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், மணியக்காரன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெல்டர் குமார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். சங்கீதா உடையாம்பாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். குமாருக்கு குடிப்பழக்கம் இருந்த காரணத்தால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே சங்கீதா குடியிருந்த வீட்டிற்கு பால் ஊற்ற வரும் கோவையை அடுத்த கொண்டயம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபு என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

தனது கணவர் தினமும் குடித்துவிட்டு வருவதாகவும், தன்னை கொடுமை படுத்துவதாகவும், தனது வாழ்க்கை நாசமாகி விட்டதாகவும் பிரபுவிடம் அடிக்கடி சங்கீதா புலம்பியிருக்கிறார். சங்கீதாவிற்கு பிரபு ஆறுதல் கூறிவந்துள்ளார். இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாற, இருவரும் செல்போன் மூலம்பேசி தங்களது காதலை வளர்த்துள்ளனர். மேலும், அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்த சங்கீதா, தனது குழத்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். கணவர் குமார் பலமுறை சேர்ந்து வாழ சங்கீதாவை அழைத்தும், அவர் வர மறுத்துவிட்டார். எனினும், கள்ளக்காதலன் பிரபுவுடன் தன் உறவை தொடர்ந்த சங்கீதா, வெளியிடங்களுக்கு சென்று உல்லாசாக பொழுதை கழித்து வந்துள்ளார். இந்த நிலையில் சங்கீதா, பிரபுவிடம் தனது கணவர் அடிக்கடி தன்னை சந்தித்து, மீண்டும் சேர்ந்து வாழ்வோம் என்று தொந்தரவு செய்துவருவதாக கூறியுள்ளார்.

இதனால் தங்களுடைய கள்ளகாதலுக்கு இடையூறாக உள்ள குமாரை கொலை செய்ய சங்கீதாவும், பிரபுவும் திட்டம் தீட்டியுள்ளனர். இந்நிலையில், நேற்று பிரபுவும், சங்கீதாவும் இணைந்து மணியக்காரன் பாளையம்பகுதியில் உள்ள குமார் வீட்டிற்கு சென்றுள்ளனர். பூட்டியிருந்த கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த இருவரும், குடிபோதையில் தூங்கிகொண்டிருந்த குமாரின் கழுத்தில் கத்தியை வைத்து  கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதில் கழுத்து பகுதியில் வெட்டுப்பட்டு காயமடைந்த குமார் வீட்டை விட்டு வெளியில் தப்பி ஓடி வந்தார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு திரண்ட அக்கம்பத்தினர், ரத்தகாயங்களுடன் உயிருக்குப்போராடிய குமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவலறிந்த சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, குமாரை கொலை செய்ய முயற்சி செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்ற சங்கீதா மற்றும் அவரது கள்ளக்காதலன் பிரபு ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

EXTRAAFFAIR

மற்ற செய்திகள்