'அந்த வீட்டுக்குள்ள குனியாம நிமிர்ந்து போகணும்யா...' கை நீட்டி 10 பைசா வாங்க கூடாதுன்னு வைராக்கியம்...' 'ஒரு மணி நேரத்துக்குள்ள...' - நெகிழ வைத்த கலெக்டர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பல வருடங்கள் வறுமையில் தனியே வாழ்ந்த முதியவருக்கு 1 மணி நேரத்தில் அவரின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்த தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவ் அவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு வழங்க சென்ற கலெக்டர் கோவிந்தராவ் அங்கிருந்த முதியவரின் நிலைக் கண்டு கண்கலங்கியுள்ளார்.

கீழவாசல், குயவர் தெருவில் வசிக்கும் 80 வயதான தங்கராசு என்னும் முதியவர் மண் பானை மற்றும் அடுப்பு செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி கமலம் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு பிறந்த ஒரே மகனும் சிறு வயதிலேயே இறந்து விட்டார்.

அதன் பின் தங்கராசு மட்டும் அப்பகுதியில் பள்ளி வாசல் ஒன்றுக்கு சொந்தமான இடத்தில் நான்கு அடி உயரம் மூன்று அடி நீளத்தில் கூரையிலான குடிசை வீடு ஒன்றை அமைத்து இரண்டு வருடங்களுக்கு மேலாக தனியாக வசித்து வருகிறார். 2½ அடி உயரம் மட்டுமே நுழைவாயில் கொண்ட அந்த வீட்டில் தங்கராசு தவழ்ந்த படியே உள்ளே சென்று வெளியே வருகிறார்.

மண்பாண்டத் தொழிலில் போதுமான வருமானம் இல்லாததால், சாலையில் கிடந்த வேஸ்ட் பிளக்ஸை எடுத்து அடிக்கடி செலவிற்கு பயன்படுத்துவராம். யாரிடமும் காசு கேட்க கூடாது, சாப்பாடு போடுங்க என கேட்க கூடாது என்ற வைராக்கியத்தில் 80 வயதிலும் உழைத்து சாப்பிட்டு வருகிறார்.

வாக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வந்த கலெக்டர் கோவிந்த ராவ் தங்கராசுவின் வீட்டை அதிகாரிகள் காண்பிக்க அதிர்ந்த அவர் இந்த வீட்டுக்குள்ள ஆள் இருக்காரா? எனக் கேட்டு தங்கராசு முதியவரை அழைத்துள்ளார்.

'எப்படி இந்த சின்ன வீட்டுக்குள்ள உங்களால இருக்க முடியுது முழுசா கால் நீட்டி படுக்க கூட முடியாதே' என கலெக்டர் கேட்க தனக்கான இயலாமையையும், தனக்கென யாரும் இல்லை என்பதையும் நா தழு தழுக்க கூறினார் முதியவர்.

மேலும், 'ரேஷன் கார்டு இருக்கு. அதுல இலவச அரிசி கிடைக்குது. நான் அடுப்பு, மண் பானை, தண்ணி தொட்டி செஞ்சு விக்கிறேன். இதுல அப்பப்ப கொஞ்சம் காசு கிடைக்கும். அத மத்த செலவுக்கு வச்சுக்கிட்டு, ரேஷன் அரிசியை பொங்கி சாப்பிடுறேன்' என சொல்ல அத்தனையும் பொறுமையாக கேட்டார் கலெக்டர்.

அதன்பின் முதியவரின் நிலையை பொறுக்க இயலாத கலெக்டர் தன்னுடன் ஆய்விற்கு வந்த மற்ற அதிகாரிகளை அழைத்து முதியோர் உதவித் தொகை கிடைக்கவும், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்துல சின்ன அளவு வீடு கட்டவும் ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

முதியவர் தங்கராசு, 'இந்த குடிசை வீட்டுக்குள்ளேயே என் வாழ்க்கை முடிஞ்சுடுமோன்னு பல ராத்திரிகள் நெனச்சு தவிச்சுருக்கேன். ஒரே நாள்ல என் கனவிற்கான கதவை திறந்துட்டீங்கய்யா அந்த வீட்டுக்குள்ள நான் நிமிர்ந்து போற மாதிரி மட்டும் கட்டி கொடுங்கய்யா' எனக் கலெக்டரிடம் கேட்டுள்ளார்.

பெரியவரின் கைகளை சட்டென கலெக்டர் பற்றிக் கொண்ட கலெக்டர் 'நான் என்னோட கடமையை தான் செஞ்சிருக்கேன்' எனக் கூறிவிட்டு அவர் சென்றதாக தெரிவித்தனர்.

                                  

'இனி என்னடா செய்யப் போறோம்ன்னு தவிச்சு நின்னேன். ஒரு நாள்ல என்னோட உலகத்த கலெக்டர் மாத்திட்டார். உடம்புல உயிர் இருக்கும் வரை, மறக்க மாட்டேன்' என முதியவர் தங்கராசு மனம் நெகிழ கூறியுள்ளார். அவர் மட்டுமல்லாது அப்பகுதி மக்களும் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அவர்களை மனம் நெகிழ பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்