'உங்க செயினோட டிசைன் ரொம்ப நல்லா இருக்கு...' 'இது மாதிரி ஒண்ணு பண்ணனும், கொஞ்சம் வாங்களேன்...' 'மகனோட ஃப்ரண்ட்ன்னு நெனச்சு பேசிய பாட்டி...' - கொஞ்ச நேரத்துல எல்லாமே தெரிஞ்சு போச்சு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் மூதாட்டிகளை மட்டும் குறிவைத்து தங்கநகைகள் கொள்ளையடித்து வரும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, தாண்டவராயன் தெருவைச் சேர்ந்த 65 வயதான வீரசின்னம்மாள் என்னும் பாட்டி கடந்த 15-ம் தேதி மீன் வாங்க தண்டையார்பேட்டை மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு இளைஞர் வந்து தன்னை வீரசின்னம்மாளின் மகன் போஸின் நண்பன் எனக் கூறி அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார்.

தன் மகனின் நண்பன் தான் எண்ணி வீரசின்னம்மாளும் சிறிது நேரம் பேசியுள்ளார். அதையடுத்து அந்த இளைஞர் தன்னுடைய மைத்துனருக்கு திருமணம், அதனால் உங்களின் தாலிச் செயினைப்போல புதிதாக ஒரு செயின் செய்ய வேண்டும் என்று கூறி வீரசின்னம்மாளை நகை செய்யும் இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அதன்பின், 'அங்கு கூட்டமாக இருக்கிறது. கொரோனா என்பதால் நீங்கள் இங்கு காத்திருங்கள், நான் செயினைக் காண்பித்துவிட்டு உடனே வந்துவிடுகிறேன்' எனக் கூறி அந்த இளைஞர் வீரசின்னம்மாளின் தாலி செயினை வாங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அந்த இளைஞர் வராததால், அவர் நாடகம் ஆடி ஏமாற்றிவிட்டதை உணர்ந்துள்ளார். நடந்த அனைத்தையும் வீரசின்னம்மாள் அங்கிருந்து வீட்டிற்கு வந்து நடந்த விவரத்தைக் குடும்பத்தினருடன் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வீரசின்னம்மாள் புகாரளித்தத்தின் பெயரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

அப்போது வீரசின்னம்மாளை இளைஞர் பைக்கில் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தததால், அந்த இளைஞர் மற்றும் அவர் பயன்படுத்திய பைக் குறித்து போலீசார் விசாரித்தனர்.

அதன்பின் திருட்டு மோசடியில் ஈடுபட்ட இளைஞர் 41 வயது சிவா என்கிற சிவகுமார் எனவும், இவர் சென்னை கோடம்பாக்கம், பாரதீஸ்வரர் காலனியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இந்த சிவகுமார் இளைஞர்  வீரசின்னம்மாளைப் போலவே இன்னும் இரண்டு மூதாட்டிகளை ஏமாற்றி நகைகளைப் பறித்ததாக போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.

மேலும் அவரிடமிருந்து 16.5 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . இவர் கோடம்பாக்கம், அரும்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், சித்தாலப்பாக்கம், அபிராமபுரம் ஆகிய காவல் நிலையங்களில் மூதாட்டிகளின் கவனத்தை திசைதிருப்பி நகைகளைப் பறித்துச் செல்லும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்