'என் கல்யாணத்த பார்க்க...' அப்பா நம்ம கூட இல்லையே...! 'மேரேஜ் அன்னைக்கு அக்கா கொடுத்த இன்ப அதிர்ச்சி...' - ஆனந்த கண்ணீரில் உருகிய தங்கை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அப்பாவின் ஆசீர்வாதத்துடன் திருமணம் நடக்க வேண்டும் என்ற தங்கையின் ஆசையை சகோதரிகள் நினைவாக்கிய நெகிழ்ச்சி சம்பவம் தஞ்சாவூரில் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் செல்வம் இவருக்கு கலாவதி என்ற மனைவியும், மூன்று மகள்கள் உள்ளனர். இரு மகள்களுக்கும் திருமணம் முடிந்த நிலையில் கடைசி மகளுக்கு திருமண பேச்சு ஆரம்பிக்கும் சமயத்தில் எதிர்பாராதவிதமாக கடந்த 2012 -ஆம் ஆண்டு செல்வம் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது செல்வத்தின் செல்ல மகளான கடைக்குட்டி லட்சுமி பிரபாவுக்கும், கிஷோர் என்ற மணமகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் லட்சுமி பிரபா, மறைந்த அப்பா தனது திருமணத்தில் இல்லாததை நினைத்து தொடர்ந்து வருந்தி வந்தார்.

தங்கையின் சோகத்தை அறிந்த லண்டனில் மருத்துவராக பணிபுரியும் மூத்த சகோதரி புவனேஷ்வரி, தங்கையின் வருத்ததை போக்கும் வகையில் தனது கணவர் உதவியுடன் சுமார் 6 இலட்சம் செலவில் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிலிக்கான் மற்றும் ரப்பரைக் கொண்டு தனது தந்தையின் முழு உருவ சிலையை வடிவமைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று பட்டுக்கோட்டையில் நடந்த திருமணத்தின் போது, தந்தையின் முழு உருவ சிலையை தன் பாச தங்கைக்கு காட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் அவரது குடும்பத்தார்.

மணமகளான லட்சுமி பிரபா தன் தந்தையின் சிலையை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்து, தந்தையின் சிலை அருகே தாய் கலாவதியை நிற்க வைத்து காலில் விழுந்து ஆசீர்வாதமும் பெற்றனர்.

இந்த உணர்வுப்பூர்வமான சம்பவம் அவர்களது குடும்பத்தாரையும், கல்யாணத்தில் பங்குகொண்ட உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது எனலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்