'எங்க அடிச்சா வலிக்கும்னு கொரோனாவுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு!'.. அடுத்தடுத்து அரங்கேறும் துயரம்!.. சவாலை சந்திக்க தயாராகும் காவல்துறை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இதுவரை 15 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அயனாவரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஒருவர், 4 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட இதுவரை மொத்தமாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்குப் பிரிவு ஆய்வாளர் பாலமுரளி, கொரோனா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது கொரோனாவால் தமிழகத்தில் காவல்துறையில் நிகழ்ந்த முதல் உயிர்ப் பலியாகும்.

சென்னை காவல்துறையில் இதுவரை கொரோனாவால் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 300 பேர் பூரண குணமடைந்து பணிக்குத் திரும்பி உள்ளனர். இந்நிலையில், அயனாவரம் காவல் நிலையத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

மேலும், ஆவடி அருகேயுள்ள திருமுல்லைவாயல் பகுதி காவல்நிலைய ஆய்வாளருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக இருப்பவர் புருஷோத்தமன். இவர் கடந்த 2 மாதத்துக்கு மேலாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் காய்ச்சல், சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்குச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

இந்தப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் சென்னை செனாய் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து அவருடன் பணியாற்றிய, உதவி ஆய்வாளர்கள் மற்றும் சக காவலர்கள் அனைவருக்கும் தொற்று குறித்து பரிசோதனை செய்யத் திட்டமிட்டுள்ளனர். மேலும், அவர் பணியாற்றிய காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்