'அவர் பெரிய தலைவர் இல்லை'... 'ஏதாவது பேசுவார், வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார்'... முதல்வர் கிண்டல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

எஸ்.வி சேகர் ஏதாவது பேசுவார், வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அதிமுக உருப்பட வேண்டுமென்றால் அதிமுக கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்ஜிஆர் படத்தை வைக்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் கூறியிருந்தார். இது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அதுகுறித்து நேற்றைய தினம் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்குக் கறாராகப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கொடிய காட்டி ஓட்டு வாங்கி அதிமுக எம்எல்ஏ ஆனவர் எஸ்.வி.சேகர். அவர் மான ரோஷம் உள்ளவராக இருந்தால் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் பெற்ற சம்பளம் மற்றும் தற்போது பெறும் ஓய்வூதியத்தைத் திருப்பித்தர வேண்டும். அதனை அவர் செய்வாரா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த எஸ்.வி சேகர், என் எம்எல்ஏ சம்பளம், என் ஓய்வூதியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதிமுகவினால் அல்ல. என் உழைப்புக்கு அரசு கொடுத்த கௌரவம். நான் என் கருத்தில் உறுதியாக இருக்கிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதா படத்தை அதிமுக கொடியில் போட முடியாது எனச் சொல்வீர்களா? என மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் எஸ்.வி.சேகர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த முதல்வர், ''நாங்கள் எல்லாம் பதில் அளிக்கும் அளவிற்கு எஸ்.வி.சேகர் பெரிய தலைவர் இல்லை. அவர் முதலில் எந்த கட்சியில் இருக்கிறார் என்பதே தெரியவில்லை. நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது அவர் வந்ததே இல்லை என்று கூறினார். மேலும் எஸ்.வி சேகர் எதாவது கருத்துச் சொல்லிவிட்டு வழக்கு வரும்போது, ஓடி ஒளிந்து கொள்வார்'' என்று முதல்வர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்