நள்ளிரவு வங்கியில் அடித்த ‘அலாரம்’.. பதறியடித்து ஓடி வந்த மக்கள்.. அரியலூர் அருகே பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நள்ளிரவு வங்கியின் அலாரம் திடீரென ஒலித்ததால் மக்கள் வங்கி முன் கூட்டமாக கூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 7-ம் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வங்கியை மாலை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்துள்ளது. இந்த சூழலில் நேற்று நள்ளிரவு பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து திடீரென அலாரம் ஒலித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் குடியிருக்கும் மக்கள் வங்கி முன் குவிந்தனர். கொள்ளையர்கள் யாரும் வங்கிக்குள் புகுந்துவிட்டனரா? என்ற சந்தேகத்தில் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வங்கிக்கு வந்த ஊழியர்கள் போலீசாரின் முன்னிலையில் வங்கியை திறந்து பார்த்தனர். அப்போது வங்கிக்குள் மர்ம நபர்கள் யாரும் இல்லை, பணப் பாதுகாப்பு அறையும் பாதுகாப்பாக இருந்துள்ளது. இதனை அடுத்து அலாரம் அணைக்கப்பட்டது. இந்த நிலையில் அலாரம் திடீரென எப்படி ஒலித்தது? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்