'பேச போன என் பொண்ண காணும்'... 'சென்னை ஏர் இந்தியா ஊழியருக்கு நடந்தது என்ன'?... பரபரப்பு நிமிடங்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விமான நிறுவன பெண் ஊழியர் காரில் கடத்தப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அவரை அழைத்து சென்றவர்களே அந்த பெண்ணை காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகள் டிம்பிள். இவர் சென்னையில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே டிம்பிள் விமான நிலையத்தில் வேலை செய்வதால், தனக்கு தெரிந்த ஒருவர் மூலம் தனியார் விமான நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கி தருவதாக கூறி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வாலிபர்களிடம் பல லட்ச ரூபாய் வரை வாங்கி கொண்டு வேலை வாங்கி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் பணம் கொடுத்த வாலிபர்கள் வேலை கிடைக்காதல் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்குமாறு டிம்பிளை வற்புறுத்தியுள்ளார்கள். இதையடுத்து வாலிபர்களிடம் நேற்று சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள உறவினர் ஒருவருடைய வீட்டில் வைத்து பணம் தருவதாக டிம்பிள் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதை நம்பி 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் சேலம் வந்தனர். ஆனால் அவர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை. இதனிடையே டிம்பிள் குடும்பத்தினர், தஞ்சாவூரில் பணம் இருப்பதாக கூறியதால் டிம்பிள், அவருடைய தந்தை காளிமுத்து மற்றும் உறவினர் ஒருவரை வாலிபர்கள் காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் திடீரென டிம்பிளின் தாயார், இரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் தனது கணவர் மற்றும் மகளை வாலிபர்கள் சிலர் காரில் கடத்தி சென்றதாக தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், பணம் கொடுத்த வாலிபர்களுக்கு இந்த புகார் குறித்து தெரியவந்தது. உடனே சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நள்ளிரவில் அந்த பெண்ணை அழைத்து வந்தனர்.

மேலும் காரில் கடத்தப்பட்டதாக கூறப்படும் டிம்பிள் மற்றும் அவருடைய பெற்றோரை போலீசார் விசாரணைக்காக அன்னதானப் பட்டி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அவரை அழைத்து சென்ற வாலிபர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பணம் கொடுத்து ஏமாந்ததாக கூறப்படும் வாலிபர்கள் கூறும் போது, ‘தனியார் விமான நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமானவர்களிடம் டிம்பிள் பல லட்ச ரூபாய் வரை பெற்று கொண்டு வேலை வாங்கி கொடுக்கவில்லை.

இதற்கிடையே அவர் பணம் தருவதாக கூறியதால் நாங்கள் சேலம் வந்தோம். பின்னர் தஞ்சாவூரில் பணம் இருப்பதாக கூறியதால் அவரை காரில் அழைத்து சென்றோமே தவிர கடத்தவில்லை. மேலும் அவரிடம் நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டுத்தர வேண்டும்’ என தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்கள். அதே நேரத்தில் டிம்பிள் இந்த குற்றச்சாட்டை போலீசார் விசாரணையின் போது மறுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவர், தனக்கு தெரிந்த ஒருவரிடம் அந்த வாலிபர்களை அறிமுகம் செய்து வைத்தேன், அவர் தான் பணம் வாங்கி கொண்டு ஏமாற்றி இருக்கலாம். அவரிடம் பணத்தை பெற்றுத்தர நானும் உறுதுணையாக இருக்கிறேன் என்று போலீசாரிடம் அந்த பெண் கூறியதாக தெரிகிறது. இதனிடையே திடீரென பெண் கடத்தப்பட்டதாக பெண்ணின் தயார் புகார் கொடுத்ததால், சேலம் காவல்துறையில் நேற்று பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

AIRINDIA, FLIGHT, SALEM, CHENNAI, ABDUCTION, AIRLINE EMPLOYEE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்