Video: “Untime-ல கதவ தட்டுனா.. இத மட்டும் பண்ணிடாதிங்க!”.. அதே Method-ல இருக்கே? சீர்காழி சம்பவத்தில் பவாரியா கும்பலா? - உரிக்கும் நிஜ ‘தீரன்’ Exclusive பேட்டி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சீர்காழியில் இரண்டு பேரைக் கொன்றுவிட்டு 16 கிலோ நகையை வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவை உலுக்கி வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தப்ப முயன்ற ஒருவர் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டதுடன் மீதமுள்ள 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த கொலைச் சம்பவம் நடிகர் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட பாணியில் நடந்ததாக பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தீரன் கதாபாத்திரத்தின் நிஜமான அதிகாரி ஜாங்கிட் ஐபிஎஸ் இதுபற்றி Behindwoods சேனலுக்கு பிரத்தியேகப் பேட்டி தந்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

போலீஸ் அதிகாரிக்கும் சரி, மக்களுக்கும் சரி தமிழகத்தை தாண்டி வெளியில் இருந்து தமிழகத்துக்குள் கூலி வேலை, காண்ட்ராக்ட் உள்ளிட்ட பல விதமான வேலைகளுக்கு வருபவர்களுள் யார் கிரிமினல் என்பதை கண்டுபிடிப்பது சவாலானது தான். எனவே முன்னெச்சரிக்கை என்பது அதிகாரிகள் தரப்பில் அவசியமாக இருக்கிறது. போலீஸ் அதிகாரிகள் தரப்பிலிருந்து சீர்காழி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பவாரியா கும்பலை சேர்ந்தவர்களா என்பது பற்றி இன்னும் நான் விசாரிக்கவில்லை. அதே சமயம் என் அறிவுக்கு எட்டியவரை இவர்கள் பவாரியா கும்பலைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால் இவர்கள் பவாரியா கும்பலின் அதே மெத்தேடில் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

ஆனால் பவாரியா கும்பலை பொருத்தவரை அவர்கள் லாரியில் தான் வருவார்கள். லாரியில் வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும்போது உடனடியாக கொள்ளை அடித்த இடத்தில்  கொலை சம்பவங்களை நொடியில் நடத்தி முடிந்ததும் கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போய்விடுவார்கள். பவாரியா கும்பலை பொறுத்தவரை வீட்டுக்குள் நுழைந்த அடுத்த நொடியே அவர்கள் யாராக இருந்தாலும் தாக்குதலை தொடங்கிவிடுவர்.  எனவே சீர்காழி சம்பவத்தை பொறுத்தவரை இதில் ஈடுபட்டவர்கள் பவாரியா கும்பலாக தெரியவில்லை.  ஏனென்றால் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வாகனங்களை பயன்படுத்தி தப்பித்துள்ளார்கள். எனினும் போலீசார் மிகுந்த திறமையுடன் மிக விரைவில் இந்த கொள்ளையர்களை பிடித்துள்ளனர்.

இரவு நேரத்தை பொறுத்தவரை யாரேனும் கதவைத் தட்டினால் நாம் திறந்தால், அது கண்டிப்பாக அபாயகரமானது தான். முன்பின் தெரியாத நபர்கள் இரவு நேரத்தில் நம் வீட்டு கதவை தட்டும் பொழுது நாம் முதலில் வீட்டுக்குள் இருந்தபடியே யார் என்று கேட்க வேண்டும். மீறியும் பயம் ஏற்பட்டால் உடனடியாக போனை எடுத்து பக்கத்து வீட்டுக்காரருக்கு சொந்தக்காரருக்கு போலீசார் இருக்கும் தகவலைச் சொல்லலாம். இப்போது எல்லாரிடத்திலும் போன் இருக்கிறது. ஆனால் இவை தவிர அன் டைமில் (நள்ளிரவு நேரங்களில்) நமக்கு தெரியாத நபர்கள் வீட்டுக்கதவைத் தட்டும் பொழுது நாம் கதவைத் திறப்பது என்பது துரதிஷ்டமானது தான்.

என்னுடைய ஆலோசனை இதுதான் வெளியில் யார் இருக்கிறார்கள் என வீட்டுக்குள்ளிருந்து கதவு துவாரங்கள் வழியாகவும், வீட்டுக்குள் இருக்கும் கண்காணிப்பு வீடியோக்கள் வழியாகவும் பார்க்கக்கூடிய வசதி வாய்ப்புகள் நிறையவே வந்துவிட்டன. அவற்றை பயன்படுத்தினால் இழப்புகள் இல்லை. சீர்காழி கொள்ளை சம்பவம் போன்ற விவகாரங்களில் ஒரு வீட்டில் இருக்கும் தங்கம், பணம் உள்ளிட்ட விபரங்களை வடமாநில கொள்ளையர்கள் எப்படி அறிகிறார்கள்?. அவர்கள் முன்கூட்டியே அந்த வீடு ,அந்த வீட்டில் இருப்பவர்கள், அந்த வீட்டின் உள்ளே இருக்கும் நகை, பணம் உள்ளிட்ட பொருட்கள் பற்றிய அடிப்படை விவரங்களை முழுமையாக சேகரித்து விடுவார்கள்.

ALSO READ: "நாம அதுக்கு ஆப்போசிட்டா செய்வோம்!".. முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்ட விவகாரம்.. ‘உலகத் தமிழர்களின்’ உணர்வில் இடம்பிடித்த ‘கனடா’ மேயரின் ‘வாக்குறுதி!’

திடீரென்று முன்பின் தெரியாமல் ஒரு வீட்டை குறிவைத்து வரமாட்டார்கள். அவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தால் மட்டும் தான் குறிப்பிட்ட ஒரு வீட்டை அவர்கள் அணுகுகிறார்கள். எனவே ஊரில் இருப்பவர்கள் தேவையில்லாமல் ஊருக்குள் வித்தியாசமான முறையில் நோட்டமிட்டு இருக்கும் வடமாநிலத்தவர்களை கவனிப்பதும், அப்படி சந்தேகம் வரும்பட்சத்தில் போலீசாருக்கு தகவல் சொல்வதும், நாம் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருப்பதும் அவசியம்.

பவாரியா கும்பலை நாங்கள் பிடித்து விசாரித்துக் கொண்டிருந்தபோதே, ‘எதற்காக தமிழ்நாட்டை மட்டும் குறி வைத்து கொள்ளை அடிக்கிறீர்கள்’ என்று விசாரித்தோம். அதற்கு அவர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்றால்,  ‘சார் தமிழ்நாட்டில் ஒரு வீட்டில் நாங்கள் கொள்ளையடிப்பதற்காக ஆய்வு செய்யும் போது ஒரு வீட்டில் அவ்வளவு தங்கம் இருந்தது. இந்தியாவில் வேறு எங்கும் ஒரே வீட்டில் இவ்வளவு தங்கத்தை பார்க்க முடியாது’ என்று சொன்னார்கள்.

தமிழகத்தை அல்லது தென்னிந்தியாவை அவர்கள் குறிவைப்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். ஆக தங்கத்தை நிறைய வைத்திருப்பது என்பது கொள்ளையர்களை ஈர்க்கக் கூடிய ஒன்று. அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருத்தல் அவசியம். வீடுகளை விடவும் அவற்றை பாதுகாப்பான லாக்கர்களில் வைத்திருப்பது நல்லது.”

ALSO READ: ‘ஆன்லைனில் ஆர்டரா?’.. தமிழகத்தையே உறைய வைத்த சீர்காழி கொள்ளை சம்பவத்தில் ‘பரபரப்பு’ திருப்பம்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்