'என் மக்களே, நான் ஏன் 234 தொகுதியிலும் தனியா போட்டியிடுறேன் தெரியுமா?'... உண்மையை உடைத்த சீமான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

234 தொகுதிகளிலும் தான் எதற்காகத் தனியாகப் போட்டியிடுகிறேன் என்பது குறித்து சீமான் பேசியுள்ளார்.

தமிழக தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடலூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ''டாக்டர் ராமதாஸ், தொல்.திருமாவளவன், சரத்குமார், கார்த்திக் ஆகியோரது கட்சிகளுக்குத் தமிழகத்தில் குத்தப்பட்ட முத்திரை என் மீதும் விழக்கூடாது என்பதற்காகவே சிவகங்கை மாவட்டத்தில் பிறந்த நான் கடந்த தேர்தலில் வட மாவட்டமான கடலூரில் போட்டியிட்டேன். அப்போது நான் தோற்கவில்லை மக்கள்தான் தோற்றார்கள்.

தற்போது சென்னையில் போட்டியிடுகிறேன். மண்ணை காப்பாற்ற அரசியல் செய்யாமல் ஒற்றை உயிரினமான மனிதர்களைக் காப்பாற்ற அரசியல் உருவாக்கப்படவில்லை. அனைத்தையும் சரி செய்ய ஒன்று மட்டுமே உள்ளது. விவசாயி சின்னத்திற்கு உங்கள் ஓட்டுப் போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். விவசாயி சின்னத்துக்கு ஓட்டு நீங்கள் போடுங்கள் உங்கள் நாட்டை நான் பார்த்துக் கொள்கிறேன்.

உதயசூரியன் மற்றும் இரட்டை இலை சின்னம் ஏழைகளின் சின்னம் எனக் கூறுவார்கள். எத்தனை ஆண்டுகளுக்கு ஏழை எளியவரின் சின்னம் 2-ம் பணக்காரர்கள் சின்னமாக இருக்கிறது. உண்மையிலேயே ஏழைகளின் சின்னம் விவசாயிகள் சின்னம் மட்டுமே எனவே மக்களாகிய ஏழை விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள்'' எனக் கூறினார்.

மேலும் ''மக்கள் என்னைக் கைவிட மாட்டார்கள் என்பதால் 234 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களைக் களமிறக்கிப் போட்டியிடுகிறோம். வாழ்கின்ற பூமிக்கு அரசியல் செய்யாமல் வணங்குகின்ற சாமிக்கு அரசியல் செய்கின்ற கூட்டம் உருவாகியுள்ளது''‌. எனத் தனது பரப்புரையில் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்