'சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை வழக்கு'... 'உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு'... வெளியான முழு தீர்ப்பின் விவரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சென்னை-சேலம் இடையிலான 8 வழி பசுமை சாலை அமைக்கும் திட்டம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிராகத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாகக் கடந்த அக்டோபர் 1-ந் தேதி விசாரணை நடைபெற்றது. அதில் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, சென்னை-சேலம் இடையேயான 8 வழி பசுமைச் சாலை திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசின் சுற்றுச்சுழல் அனுமதி தேவை. ஆனால், நிலங்களைக் கையகப்படுத்தினால்தான் சுற்றுச்சுழல் அனுமதியைக் கோர முடியும் என வாதிட்டார்.

எதிர் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், சென்னை-சேலம் பசுமைச் சாலை திட்டச் சாத்தியக்கூறுகளுக்கான அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதைச் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பில் பதிவு செய்துள்ளது. இதுபோன்ற அரசின் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குச் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டும். திட்டம் தொடர்பாகத் தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது சரி என வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட செய்த நீதிபதிகள், இந்த மேல்முறையீடு தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாதங் களை எதிர் மனுதாரர்கள் ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவற்றுக்கான விளக்க மனுவை மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்து நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகளின் தீர்ப்பில், ''எட்டு வழிச் சாலைக்கான  நிலம் கையகப்படுத்தும் அரசின் அறிவிப்பாணை செல்லும். ஆனால், விவசாய நிலங்களை  வகைமாற்றம் செய்யும் நடைமுறை தவறு. அதனால் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கான தடை தொடரும். புதிய அறிவிப்பாணை வெளியிட்டு நடவடிக்கை தொடரலாம். சேலம் - சென்னை 8 வழி கட்டணச் சாலைக்காகக் கையகப்படுத்திய நிலங்களை மக்களுக்கே திருப்பி தரவேண்டும்.

சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற திருத்தம் செல்லாது. அனுமதி தேவை. அதேபோன்று மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும். புதிய அரசாணை பிறப்பித்து மீண்டும் திட்டத்தைத் தொடரலாம்'' என நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் கூறியுள்ளார்கள்.

மேலும் சுற்றுச்சூழல் விதிமுறைகளைக் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நில உரிமையாளர்களின் மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்