25 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை.. தேடப்பட்டு வந்த குற்றவாளி.. மிலிட்டரி'ல இருந்து ஓய்வாம்.. அதிர்ந்து போன போலீஸ்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி, இராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் என்ற தகவல், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி ஊராட்சியை அடுத்த பெரியவடக்கம்பட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த வெங்கட்டன் என்பவருக்கும் நிலப் பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கடந்த 1997 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதியன்று, வெங்கட்டன் மற்றும் அவரது மகன்களான தனபால், வேணுகோபால் ஆகியோர், லட்சுமணனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த லட்சுமணன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தலைமறைவு

மேலும், இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வெங்கட்டான் மற்றும் தனபால் ஆகியோரை கைது செய்தனர். ஆனால், வேணுகோபால் மட்டும் தலைமறைவாகி விட்டார். அவரைப் பல இடங்களில் போலீசார் தேடியும், எங்கு சென்றார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து, இந்த வழக்கும் சேலம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

சிறைத் தண்டனை

இந்த வழக்கின் விசாரணையில், தந்தை வெங்கட்டன் மற்றும் மகன் தனபால் ஆகியோருக்கு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தலைமறைவான வெங்கட்டனின் மகன் வேணுகோபாலை பிடிக்க பிடிவாரண்டும் நீதிமன்றம் பிறப்பித்தது. தற்போது, சிறைத் தண்டனை முடிந்து வெங்கட்டன் மற்றும் தனபால் ஆகியோர் விடுதலை அடைந்து வெளியே வந்து விட்டனர்.

சிக்கிய வேணுகோபால்

ஆனால், வேணுகோபாலை மட்டும் கண்டுபிடிக்க முடியாத நிலை தான் போலீசாருக்கு இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, தலைமறைவு குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, தீவிரமாக தேடி வந்த தனிப்படை போலீசாருக்கு, வேணுகோபால் தங்கியிருக்கும் இடம் குறித்து தகவல் தெரிய வந்தது.

அதிர்ச்சி தகவல்

இந்நிலையில், வேணுகோபாலை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, வேணுகோபால் தலைமறைவாக இருந்த 25 ஆண்டுகளில், 24 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார் என்பது தான் அது. கடந்த 1989 ஆம் ஆண்டில் இருந்து இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

ராணுவத்தில் பணி

அப்போது, ஒருமுறை விடுமுறையில் ஊருக்கு வந்த சமயத்தில் தான், நிலத்தகராறு பிரச்சனையில், கொலை நடந்ததாக கூறப்படுகிறது. தந்தையும், சகோதரரும் மாட்டிக் கொள்ள, மீண்டும் ராணுவத்திற்கு சென்று சேர்ந்து விட்டார் வேணுகோபால். அரியானா மாற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கிறது.

போலீசார் அதிர்ச்சி

மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு, ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற வேணுகோபால், சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லாமல், சேலம் அருகே குரங்கு சாவடி என்னும் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். அவரைத் தற்போது கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 25 ஆண்டுகளாக கொலை குற்றத்தின் பெயரில் தலைமறைவாக இருந்த வேணுகோபால், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தகவல், போலீசார் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரிடம் விசாரணை

கொலை நடந்த சமயத்தில், வெங்கட்டன் குடும்பத்தினர் குறித்தும், வேணுகோபால் எங்கு பணியாற்றுகிறார் என்பது பற்றியான தகவல்களை சரியாக போலீசார் சேகரிக்கவில்லை என்பது பற்றியும், சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

SALEM, MILITARY, MURDER, ராணுவம், சேலம், கொலை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்