ஆச ஆசையா பார்த்து கட்டின வீடு!.. நடுராத்திரியில் வெடித்து சிதறிய ஜன்னல்கள்!.. தொழிலதிபர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலத்தில் தொழிலதிபர் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மர அறுவை ஆலை உரிமையாளரான கார்த்திக், அதே பகுதியிலேயே தொழில் செய்து வந்தார். வாழ்நாள் கனவான வீட்டை, பார்த்துப் பார்த்து கட்டிய அவர் சமீபத்தில்தான் அதில் குடியேறியிருக்கிறார். புதிய வீடு என்பதால் உறவினர்கள் சிலர், கார்த்திக்கின் குடும்பத்தினரோடு தங்கியுள்ளனர். நேற்றிரவு வழக்கம்போல் இரவு உணவை முடித்த அனைவரும், அவரவரின் அறைகளில் உறங்கச் சென்றுவிட்டனர். நள்ளிரவில் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்துச் சிதறும் சத்தம் கேட்டு அலறி எழுந்த அக்கம்பக்கத்தினர், கார்த்திக்கின் வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்துபோயினர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வீட்டின் ஹாலில் தீயில் கருகிய நிலையில் 5 உடல்கள் கிடைப்பதைக் கண்ட தீயணைப்பு வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். இதனையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் அந்த உடல்கள் வீட்டு உரிமையாளர் கார்த்திக், அவரின் மனைவி மகேஸ்வரி, மகள்கள் சர்வேஷ் மற்றும் முகேஷ், கார்த்திக்கின் உறவினர் புஷ்பா ஆகியோரின் உடல்கள்தான் என்பது தெரியவந்தது.

தீ விபத்தில் இருந்து தப்பிய நபர்கள் யாருக்கும் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. விபத்து நேர்ந்தது எப்படி எனக்கேட்டால், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் தங்களுக்கு எதுவும் தெரியாது என்பதே அவர்களின் பதிலாக இருக்கிறது.

இதனிடையே, நிகழ்விடத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டனர். மின் கசிவால் தீ விபத்து நேர்ந்ததாக கூறப்படும் நிலையில், இது விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்