தொட்டால் ஷாக்.. லட்சத்துல வாங்கி கோடில விற்கலாம்.. கூட்டாளிகளின் நூதன உருட்டால் அதிர்ந்துபோன நபர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நெய்வேலியில் இரிடியம் விற்பதாக மோசடியில் ஈடுபட்ட கும்பலை கைது செய்திருக்கிறது காவல்துறை. இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Advertising
>
Advertising

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை சேர்ந்தவர் ஜாஹீர். இவருக்கு சமீபத்தில் உலகநாதன் மற்றும் ராஜன் என்பவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் மூவரும் நண்பர்களாகி இருக்கின்றனர். அப்போது ஜாஹீரிடம் தங்களிடம் விலைமதிக்க முடியாத இரிடியம் இருப்பதாக கூறியுள்ளனர் உலகநாதனும் ராஜனும். மேலும், லட்சங்களில் செலவு செய்தால் கோடிகளில் வருமானம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய ஜாஹீர் இரிடியதை வாங்க முடிவெடுத்திருக்கிறார்.

3 லட்சம்

இதனை அடுத்து தங்களிடம் உள்ள இரிடியத்தின் விலை 3 லட்ச ரூபாய் எனவும் அதை வாங்கி விற்றால் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கலாம் என உலகநாதன் கூறியதை அடுத்து, 1.64 லட்ச ரூபாயை அளித்திருக்கிறார் ஜாஹீர். மீதிப் பணத்தை நெய்வேலியில் உள்ள பாலசுப்ரமணியம் என்பவரது வீட்டிற்கு வந்து கொடுத்துவிட்டு இரிடியத்தை பெற்றுச் செல்லுமாறு கூறியுள்ளனர் இந்த மோசடி பேர்வழிகள்.

ஷாக்

அவர்கள் சொன்னதுபோலவே, நெய்வேலிக்கு சென்றிருக்கிறார் ஜாஹீர். அப்போது கண்ணாடி கூண்டுக்குள் இருந்த ஒரு பொருளை இரிடியம் என காட்டியிருக்கிறார் உலகநாதன். அதனை ஜாஹீர் தொட்டுப்பார்க்க ஷாக் அடித்திருக்கிறது. அதற்கு,"மிகவும் சக்திவாய்ந்த இரிடியம் என்பதால் ஷாக் அடிக்கிறது" என பொய் சொல்லியிருக்கிறார்கள் உருட்டு கும்பல்.

இதனை அடுத்து தன்னிடம் மீதிப்பணம் இல்லை எனவும், இரிடியத்தை கொடுத்தால் விரைவில் மீதிப்பணத்தை கொடுத்துவிடுவதாகவும் ஜாஹிர் சொல்லியிருக்கிறார். சக்தி வாய்ந்த இரிடியத்தை தொட்டுவிட்டதால் உடனடியாக பணத்தை கொடுத்துவிட்டு வாங்கிச் செல்லுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் உலக நாதனும் பாலசுப்ரணியமணியனும். 

புகார்

வாக்குவாதம் ஒருகட்டத்தில் அதிகமாகி ஜாஹீரை அந்த கும்பல் தாக்கியதாக தெரிகிறது. இதனை அடுத்து, முத்தாண்டிக்குப்பம் பகுதி போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார் ஜாஹீர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறை அதிகாரிகள் உலக நாதனையும் பாலசுப்ரமணியனையும் கைது செய்திருக்கின்றனர்.

விசாரணையில் அலுமினிய குண்டானில் கருப்பு வர்ணம் பூசி இரிடியம் என உலகநாதன் குழு விற்க முயன்றது தெரியவந்திருக்கிறது. மேலும், குண்டானுக்குள் பேட்டரி வைத்து ஷாக் அடிக்குமாறு செய்திருக்கிறார்கள் இந்த பலே நபர்கள். இதனை அடுத்து தாம்பரம் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பலனாக ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

எச்சரிக்கை

இரிடியம் வாங்கி விற்றால் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கலாம் என யாராவது கூறினால் நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களை காவல்துறை எச்சரித்திருக்கிறது. நெய்வேலியில் சக்திவாய்ந்த இரிடியத்தை விற்க முயற்சி செய்த மோசடி கும்பலை காவல்துறை கைது செய்திருப்பது அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

RANIPET, IRIDIUM, POLICE, ராணிப்பேட்டை, இரிடியம், காவல்துறை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்