'என்ன சார், மும்பை இந்தியன்ஸ் டீம் எடுக்கிறது போல இருக்கே'... 'முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அதிரடி'... கொண்டாடி தீர்த்த நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கோவிட் தொற்று காரணமாக கலைவாணர் அரங்கின் மூன்றாம் தளத்தில் சபை நடக்கிறது. முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சபைக்கு முன்னரே முதல்வர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் வந்துவிட, பின்னர் சபைக்கு வந்த ஆளுநரைச் சபாநாயகர் அப்பாவு வரவேற்று சபைக்குள் அழைத்து வந்தார்.

பின்னர் ஆளுநர், உரையை வாசித்தார். அதில் பல்வேறு சிறப்பம்சங்கள், அரசின் கொள்கை குறிப்புகள், எதிர்கால திட்டங்கள் இருந்தாலும் முக்கியமான ஒரு அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, சமூகவலைத்தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இதுவரை எந்த தமிழக முதல்வரும், ஏன் இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாதது என்று கூடச் சொல்லலாம்.

தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனை அளிக்க முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்படும் என்கிற அறிவிப்பே அது. இந்தக் குழுவில் உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநர் உரையில், “வரும் சில ஆண்டுகளுக்கு மட்டும் கிடைக்கக்கூடிய மனித வளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி விரைவான பொருளாதார வளர்ச்சி பெற முற்படுவோம்.

இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதை அமைத்து தமிழக முதல்வருக்கு ஆலோசனை கூற பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சி பெறச் செய்து பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற இந்த அரசு உறுதி செய்யும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

1. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்,
 

2. நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ,
 

3. மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்,
 

4. ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ்,
 

5. மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன்

ஆகிய ஐவர் இந்தக் குழுவில் இருப்பர். இவர்கள் பணிப் பொருளாதார நிலையை ஆராய்ந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனைகளை அளிப்பார்கள். இந்த முயற்சி அரசியல் வரலாற்றில் முதல் முயற்சி என்பதாகப் பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சமூகவலைத்தளங்களில் இது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. முதல்வரின் இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்