இறந்த தந்தைக்கு பால் ஊற்றி.. சாமி ஆடிய மகன்.. திடீர்ன்னு எழுந்து உட்கார்ந்த தந்தை... பதறிய உறவினர்கள்!! பரபரப்பு சம்பவம்.

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுக்கோட்டை மாவட்டம், முரண்டாம்பட்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). விவசாயியான இவருக்கு இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, கடந்த 19 நாட்களாக பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Advertising
>
Advertising

இதனிடையே, ஒரு சில தினங்கள் முன்பு திடீரென சண்முகம் ஆபத்தான நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். மேலும் அவர் மயக்க நிலையில் இருந்துள்ளதாகவும் தெரிகிறது. இதனையடுத்து அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் முடிவு செய்துள்ள நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கும் கொண்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஊரை நெருங்கிய சமயத்தில் மயங்கிய நிலையில் இருந்த சண்முகம் இறந்து விட்டதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் அவரது வீட்டிற்கு அருகே ஒன்று கூடி உள்ளனர்.

அது மட்டுமில்லாமல், மருத்துவமனையில் இருந்து கொண்டு வந்ததால் சாலையின் குறுக்கே வைக்கோல் மற்றும் பல்வேறு பொருட்கள் போட்டு எரித்து சடங்குகள் செய்து பின் முரண்டாம்பட்டியில் உள்ள அவரது வீட்டின் திண்ணையில் சண்முகத்தின் உடலை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்த அவரது மகன் சுப்பிரமணியன், தந்தை இறந்ததாக மாலையை கழற்றியதாக தகவல்கள் கூறுகின்றது. இதன் பின்னர் தந்தைக்கு அவர் பால் ஊற்றிய நிலையில், திடீரென அருள் வந்து மகன் சுப்பிரமணியன் ஆடத் தொடங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

அப்போது அவர், என் தந்தை சாகவில்லை என்றும் பிழைத்து விடுவார் என்றும் கூறியுள்ளார். இதைக் கேட்ட உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள், தந்தை இறந்த வேதனையிலும் அவர் மீதுள்ள பாசத்திலும் அவ்வாறு சுப்பிரமணியன் கூறியதாக நினைத்து அவரை தேற்றி உள்ளனர்.

இந்த நிலையில் தான் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் அங்கே அரங்கேறி உள்ளது. இதற்கு காரணம் சிறிது நேரத்தில் இறந்ததாக கருதப்பட்ட சண்முகம் உடலில் இருந்து அசைவுகள் தென்பட்டுள்ளது. சற்று ஆச்சரியத்துடன் அதே வேளையில் பதற்றத்துடனும் சண்முகத்தை உறவினர்கள் பார்த்துள்ளனர். அப்போது சிலர் அவர் அருகே அமர்ந்து சத்தம் போட்டு பெயரைக் கூப்பிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக கண்விழித்த சண்முகம் மெல்ல பேசவும் தொடங்கியுள்ளார்.

இதன் பின்னர் அவரது உடல் நிலையும் சீராகி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், உயிரிழந்ததாக வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட விவசாயி சண்முகம் உயிர் பிழைத்த சம்பவம், அப்பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

FATHER, SON, DEATH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்