'தம்பி, 3 மாசம் போதும் உனக்கு சிக்ஸ்பேக் வரும்'... 'கனவில் மிதந்த இளைஞர்'... அசந்த நேரம் பார்த்து அதிர்ச்சி கொடுத்த ஜிம் மாஸ்டர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் அனைவருக்குமே தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

பெங்களூரு ஒசகெரேஹள்ளியை சேர்ந்தவர் கவுசிக். 24 வயது இளைஞரான இவர் பனசங்கரியில் உள்ள உடற்பயிற்சி மையத்திற்குத் தினமும் சென்று உடலைக் கட்டுக்கோப்பாக வைக்கப் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில் அந்த உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக கிரிநகரை சேர்ந்த மோகன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

தினமும் கவுசிக் தவறாமல் உடற்பயிற்சி செய்வதைக் கவனித்து வந்த அவர், கட்டுக்கோப்பான உடற்கட்டை (சிக்ஸ்பேக்) 3 மாதத்தில் வரவைப்பதாகவும், இதற்காக தனக்கு ரூ.2 லட்சம் தர வேண்டும் என்றும் கேட்டு உள்ளார். உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட  கவுசிக், பயிற்சியாளர் மோகன் சொன்னதைக் கேட்டு ஆனந்தத்தில் மிதந்துள்ளார். பின்னர் சற்றும் யோசிக்காமல் கவுசிக் ரூ.2 லட்சத்தை மோகனிடம் கொடுத்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து பல்வேறு காரணங்களைக் கூறி, கவுசிக்கிடம் இருந்து மோகன் மேலும் ரூ.5 லட்சத்தைப் பெற்றதாகத் தெரிகிறது. ஆனால் 3 மாதங்கள் ஆகியும் கவுசிக்குக்கு சிக்ஸ்பேக் வரவில்லை என்று தெரிகிறது. இதனால் தான் கொடுத்த ரூ.7 லட்சத்தைத் திரும்பத் தரும்படி மோகனிடம், கவுசிக் கேட்டு உள்ளார். ஆனால் ரூ.7 லட்சத்தைத் திரும்பித் தராமல் மோகன் மோசடி செய்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து கவுசிக், மோகன் மீது கிரிநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மோகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாகிவிட்ட மோகனை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். உடற்பயிற்சி செய்தால் மட்டுமே சிக்ஸ்பேக் சாத்தியம் என்பதை மறந்து 7 லட்ச ரூபாயை இழந்து பரிதவித்து வருகிறார் இளைஞர் கவுசிக்.

மற்ற செய்திகள்