Breaking: கள்ளக்குறிச்சி கலவரம்.. "நாளைமுதல் தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயங்காது".. வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் பெற்றோர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நாளைமுதல் தமிழகத்தில் தனியார் பள்ளிகள், CBSE பள்ளிகள் இயங்காது என தமிழக தனியார் மற்றும் மெட்ரிகுலேஷன் சங்கம் அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

சோகம்

கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுதியில் தங்கி பயின்றுவந்த அந்த மாணவி சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, கடந்த ஆண்டுகளில் பல மாணவிகள் மரணமடைந்திருப்பதாகவும் இதற்கு காரணமான பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி சென்னை - சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் மாணவியின் உறவினர்கள் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, பள்ளியை நிரந்தமாக மூடக்கோரி இன்று காலை பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் பள்ளி வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வாகனத்தையும் போராட்டக்காரர்கள் மறித்ததால் கள்ளக்குறிச்சியே பரபரப்பாகியது. இதனையடுத்து 400 போலீஸ் அதிகாரிகள் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்

இந்நிலையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,"கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சின்ன சேலம் வழியாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் பாதை மாற்றப்பட்டுள்ளன. கலவரத்தை கட்டுப்படுத்த, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகள் இயங்காது

இந்நிலையில், தமிழகத்தில் நாளைமுதல் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், CBSE பள்ளிகள்  இயங்காது என தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் அறிவித்திருக்கிறது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த முடிவை எடுத்திருக்கிறது தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம். இதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தீர்வல்ல

எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.

மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.

KALLAKURICHI, SCHOOL, PROTEST, கள்ளக்குறிச்சி, தனியார்பள்ளி, போராட்டம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்