பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார்..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிரபல திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் உடல்நலக்குறைவால் காலமானார்.

பத்திரிக்கைப் புகைப்பட கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் கே.வி.ஆனந்த். இவர் பிரபல தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களில் பணியாற்றியுள்ளார். கடந்த 1994-ம் ஆண்டு நடிகர் மோகன்லால் நடித்த தென்மாவின் கொம்பத்து என்ற மலையாளப் திரைப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். முதல் படத்துக்கே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை கே.வி.ஆனந்த் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அவர், தமிழில் காதல் தேசம் படத்துக்கு ஒளிப்பதிவாளரானார். இதனை அடுத்து இயக்குநர் ஷங்கரின் முதல்வர், ரஜினி நடித்த சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் சிவாஜி படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஃபிலிம்பேர் விருதையும் கே.வி. ஆனந்த் பெற்றார்.

கடந்த 2005-ம் ஆண்டு கனா கண்டேன் படம் மூலம் கே.வி.ஆனந்த் இயக்குநரானார். இதனை அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து இயக்கிய அயன் திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து கோ, மாற்றான், அனேகன், கவண் மற்றும் காப்பான் உள்ளிட்ட படங்களை அவர் இயக்கியுள்ளார். தொழில்நுட்ப திறன் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் திரைத்துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று (30.04.2021) மாரடைப்பு காரணமாக கே.வி.ஆனந்த் (54 வயது) காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்