'வளர்ப்பு மகளை 3 வருஷமா பாலியல் வன்கொடுமை செய்த தந்தை...' இரும்பு கம்பிய பழுக்க வச்சு சூடு... '- கனவுல கூட நெனச்சு பார்க்க முடியாத குரூரங்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுச்சேரி மாவட்டத்தில் வளர்ப்பு மகளை 3 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி, கோரிமேடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 25-ஆம் தேதி மாலை உடலில் பலத்த காயங்களுடன் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியின் நிலையை கண்ட மருத்துவமனை நிர்வாகம் சிறுமியை குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு தகவல் அளித்ததால் பல உண்மைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

மருத்துவமனைக்கு வந்த குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவர் ராஜேந்திரன் காயமடைந்த மாணவி மற்றும் 35 வயதான அவரின் தாயாரிடம் விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையில், சிறுமியின் தந்தை பல வருடங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் தாய் கடந்த 2010 ஆண்டு 32 வயதான டைல்ஸ் தொழிலாளியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். தற்போது அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பருவமடைந்தது முதல் சிறுமியின் வளர்ப்பு தந்தை அவரை பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து உன் தாயிடம் தெரிவித்தால் உன்னையும், உன் தாயையும் கத்தியால் குத்தி கொன்று விடுவேன் என்று சிறுமியிடம் மிரட்டி வந்துள்ளார். இந்த கொடுமைகள் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான், கடந்த 25ஆம் தேதி சிறுமியின் வளர்ப்பு தந்தை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில்,  அவரது மூன்று குழந்தைகளையும் சராமாரியாக தாக்கியுள்ளார். மேலும் தன் இரண்டரை வயது குழந்தையையும் சுவற்றில் எடுத்து வீசியுள்ளார். இதனை கண்ட சிறுமி கோபமடைந்து, 'உன் பிள்ளைகளையே கொடுமை செய்கிறாயா...' என கத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் வளர்ப்பு தந்தை,  தனக்கு பிறந்த மூன்று பெண் குழந்தைகளையும் கட்டி வைத்து அடித்துள்ளார் மேலும் சிறுமியை கண்டபடி அடித்து, அவரின் கையை உடைத்து, தலையில் பலமாக தாக்கி,  இரும்பு கம்பியை நெருப்பில் காய்ச்சி சிறுமியின் உடலில் சூடு வைத்துள்ளார். 

இரும்பு கம்பியால் அடித்ததில் தலையில் காயம் ஏற்பட்டு சிறுமி மயங்கி விழுந்துள்ளார். வேலைகளை முடித்து சிறுமியின் தாய் வீட்டிற்கு திரும்பும் போது பிள்ளைகளின் நிலை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் உடனடியாக சிறுமியை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

இதையடுத்து குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் சிறுமியின் நிலை குறித்தும், அவருக்கு நடந்த கொடுமைகளை குறித்தும் கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரின் தாய் அளித்த வாக்குமூலத்தின் பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன், இனியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் போக்ஸோ உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிந்து வளர்ப்பு தந்தையை கைது செய்தனர்.

மேலும் கைதான வளர்ப்பு தந்தைக்கு கொரோனா பரிசோதனை வந்த பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்

வளர்ப்பு தந்தையே மகளை 3 வருடங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்