‘பொள்ளாச்சி பாலியல் கொடூரம்’!.. நீதிமன்றத்தில் இளம்பெண் ‘ரகசிய’ வாக்குமூலம்... மறுபடியும் பரபரக்கும் வழக்கு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் விவகாரத்தில் இளம்பெண் ஒருவர் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பாலியல் வழக்கை சிபிஐ போலீசார் விசாரித்து வருகிறது.

இதுதொடர்பாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த 5ம் தேதி அதிமுக முன்னாள் மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், பைக் பாபு, ஹெரோன் பால் ஆகிய மேலும் 3 பேரை சிபிஐ போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக சிபிஐ போலீசார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் கடந்த 25ம் தேதி கோவை மகளிர் கூடுதல் நீதிமன்றத்தில் பெண் நீதிபதி (பொறுப்பு) திலகேஸ்வரி முன்பு மேலும் ஒரு இளம்பெண் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், அப்பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மேலும் சிலரின் பெயர்களை நீதிபதியிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் இந்த வழக்கில் மேலும் பலர் சிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பொள்ளாச்சி வழக்கில் மேலும் ஒரு இளம்பெண் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்