போலீஸ் 'கண்ட்ரோல்' ரூமுக்கு வந்த போன்கால்...! 'என்ன மேட்டர்னு கேட்டுட்டு ஸ்பாட்டுக்கு போனா...' 'அப்படி ஒரு சம்பவமே நடக்கல...' - கடைசியில நடந்த 'அதிரடி' ட்விஸ்ட்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இரு இளைஞர்கள் பழைய பகையை மனதில் வைத்து போலீசாரிடம் நாடகம் ஆடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே இருக்கும் பொ.மெய்யூர் எனும் ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் கவியரசன் மற்றும் அசோக். லாரி ஓட்டுநர்களாக இருக்கும் இவர்கள் நேற்று முன்தினம் திடீரென அவசர போலீஸ் 100 என்ற எண்ணை தொடர்புக்கொண்டு, 'எங்களுக்குச் சொந்தமான ஒரு லாரியை நாங்கள் ஓட்டி வரும் போது வழிமறித்த சிலர்,  எங்களைத் தாக்கிவிட்டு லாரியை கடத்திச் சென்றுவிட்டனர். மேலும், கடத்தல்காரர்கள் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் லாரியை விடுவிப்பதாக பேரம் பேசுகின்றனர். அந்த கடத்தல்காரர்களை மடக்கி பிடித்து எங்கள் லாரியை அவர்களிடமிருந்து மீட்டுத் தர வேண்டும்' என புகார் அளித்துள்ளனர்.

இளைஞர்கள் அளித்த புகாரின் பெயரில் அவசர போலீசார் திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

அதன்பின் திருக்கோவிலூர் போலீசார் லாரி திருடப்பட்ட இடத்திற்கு சென்று அக்கம்பக்கத்தினரிடமும் விசாரணை செய்ததில் கவியரசன், அசோக் கூறியபடி அவர்கள் லாரியை யாரும் கடத்தவும் இல்லை; அதை விடுவிக்கப் பணமும் கேட்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியதில், புகார் அளித்த கவியரசன், அசோக் இருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் முன்விரோதம் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.

லாரி திருடியதாக கூறி அந்த இளைஞர்களை பழிவாங்க வேண்டும் என திட்டமிட்டு இதுபோன்று செய்தது தெரியவந்துள்ளது.

பொய்யான காரணத்தைக் கூறி போலீசாருக்கு தொந்தரவு கொடுத்தது, மற்றவர்களைப் பழிவாங்க வேண்டுமென்று பொய் புகார் அளித்தது போன்ற வழக்குகளின் கீழ் கவியரசன், அசோக் இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்