பெட்ரோல் பங்க் மேனேஜர் மீது ‘நாட்டு வெடிகுண்டு’ வீசி கொலை..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பெட்ரோல் பங்க் மேலாளர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் கம்பன் நகர் என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு பெட்ரோல் நிரப்ப கார் ஒன்று வந்துள்ளது. காரில் இருந்து இறங்கிய நபர் தண்ணீர் அருந்த செல்வதாக கூறிவிட்டு பெட்ரோல் பங்க் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது அலுவலகம் அருகே திடீரென வெடி சத்தம் கேட்டுள்ளது. அதனால் பங்க் ஊழியர்கள் பதறி அடித்துக்கொண்டு அங்கே சென்றுள்ளனர்.

அப்போது மேலாளர் சீனிவாசனை தண்ணீர் குடிக்கபோன நபர் சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொண்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே அவரை பிடிக்க பங்க் ஊழியர்கள் முயன்றுள்ளனர். ஆனால் கத்தியைக் காட்டி அந்த நபர் அங்கிருந்து தப்பியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மோப்ப நாயுடன் வந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். பட்டப்பகலில் பெட்ரோல் பங்க் மேலாளரை நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CRIME, MURDER, VILLUPURAM, PETROL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்