'அதிரடி முடிவை எடுக்க இருக்கும் ஆப்பிள்'... 'தமிழகத்திற்கு ஜாக்பாட் அடிக்குமா'?...எதிர்பார்ப்பில் பட்டதாரி இளைஞர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கணினி, செல்போன் மற்றும் வாட்ச் இவற்றில் ஆப்பிள் தயாரிப்புகளை ஒன்றையாவது வாங்கி விட வேண்டும் என்பது நிச்சயம் பலரின் நீண்ட நாள் கனவாகவே இருக்கும். அந்த அளவிற்கு ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆப்பிள் நிறுவன டிஜிட்டல் சாதனங்களை உற்பத்தி செய்து வரும் இரண்டாவது பெரிய நிறுவனமான PEGATRON தமிழகத்தில் உற்பத்தி கூடத்தை ஆரம்பிக்க ஆர்வம் காட்டி வருகிறது.

'PEGATRON' நிறுவனம் தமிழகத்தில் உற்பத்தியை ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருப்பது, செல்போன் உற்பத்தியில் தகுதியான திறன் படைத்த ஊழியர்கள் இங்கு இருப்பது தான். எனவே மற்ற மாநிலங்களை விடத் தமிழகத்தில் அதன் உற்பத்தி கூடம் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகிறது. இதனிடையே மத்திய அரசின் PLI திட்டத்தின் கீழ் இந்தியாவில் தொழில் தொடங்க PEGATRON நிறுவனம் விண்ணப்பித்துள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையே ஆப்பிள் சாதனங்களை உருவாக்கும் FOXCONN நிறுவனத்தின் உற்பத்தி கூடம் ஏற்கனவே தமிழகத்தில் இயங்கி வருகிறது. அதேநேரத்தில் PEGATRON நிறுவனத்தின் முதலீட்டைத் தமிழகம் ஈர்க்கும் வகையில் ஒற்றைச் சாளர முறையில் நிலத்திற்கான குத்தகையில் ஆரம்பித்து கடனுக்கான வட்டி வரை மானியம் அளிக்கப்படும் எனவும் தமிழக அரசு உறுதி கொடுத்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு தொழில் தொடங்க சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் PEGATRON நிறுவனம் தனது உற்பத்தி கூடத்தை ஆரம்பிக்கும் பட்சத்தில், இங்குள்ள பல பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகும். கொரோனா காரணமாகப் பலர் வேலையிழப்பு, சம்பள குறைப்பு போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய வேலைவாய்ப்புகள் உருவாவது நல்ல மாற்றத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் உத்தரப்பிரதேசம், ஆந்திர, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா எனப் பிற மாநிலங்களிலும் உற்பத்தி கூடத்தை அமைப்பது தொடர்பாக PEGATRON ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு அதிக வாய்ப்பிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்