"மாண்புமிகு நம் முதல்வர் வரலாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்" - சட்டப்பேரவையில் ஸ்டாலினை பாராட்டி ஓ.பன்னீர் செல்வம் சிறப்புரை.

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக அரசு சார்பில் ஒரு ஆண்டு முழுவதும் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார்.

Advertising
>
Advertising

கேரள மாநிலம் திருவாங்கூர் சமஸ்தானத்தில் சோமநாதர் கோயில், வைக்கம் என்கிற ஊரில் இருந்தது. இந்த கோவிலை சுற்றி இருந்த ஒடுக்கப்பட்ட சாதியினர் இக்கோயிலை சுற்றி இருக்கிற தெருக்களில் நடக்கவும் கோயிலுக்குள் வரவும் பல ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

1924 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி இந்த பிரச்சனை தொடர்பான முதல் போராட்டமாக வைக்கம் போராட்டம் தொடர்ந்தது. இந்த அறவழிப் போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் தங்களுடைய பங்களிப்பை செய்து இருந்தனர். இந்த நிலையில்தான் இப்போராட்டத்தின் நூற்றாண்டு விழா மார்ச் 30ஆம் தேதி முதல் ஓர் ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகிறது என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நாளான இந்த நாளில் கோயில் நுழைவு போராட்டங்கள் அனைத்துக்கும் முன்னாடியாக திகழ்ந்த வைக்கம் போராட்டம், ஓராண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்கள் சமத்துவ உரிமையை பெறுவதில் முதல் படியாக அமைந்த இந்த போராட்டம் 1925 நவம்பர் 23ஆம் நாள் முடிவுக்கு வந்ததாகவும் அதே வருடமான நவம்பர் 29ம் தேதி பெரியார் தலைமையில் வைக்கத்தில் வெற்றி விழாவாக நடந்ததாகவும் குறிப்பிட்ட தமிழக முதலமைச்சர், பெரியாரை போற்றும் விதமாக இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஆலய நுழைவுப் போராட்டத்தில் சிறப்புமிக்க போராட்டமான வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சிறப்பாக கொண்டாடும் வகையிலும், இப்போராட்டத்தின் நோக்கம் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்படும் என்று தெரிவித்த மு.க.ஸ்டாலின் இப்போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த அருவிக்குத்து கிராமத்தில் பெரியாருக்கு நினைவிடம் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்றும், செப்டம்பர் 17-ஆம் தேதி சமூக நீதி நாள் என்று தமிழக அரசால் வைக்கம் விருது வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார் தவிர, கேரளாவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் முதல்வர் பினராய் விஜயுடன் பங்கேற்க சொல்வதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் இதுகுறித்து பேரவையில் பேசிய முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவரான, ஓ.பன்னீர்செல்வம் பேசும் பொழுது, “இன்றைய தினம் வரலாற்று நிகழ்வாக மாண்புமிகு முதலமைச்சர் ஒரு சிறப்பான வரலாற்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். திராவிட இயக்கத்தினுடைய தலைக்காவிரியாக விளங்கிய, திராவிட இயக்கத்தின் தந்தையாக விளங்கிய தந்தை பெரியார், மொழி கடந்து மாநிலம் கடந்து சமூக நீதிக்காக நடத்திய வைக்கம் போராட்டத்தை போற்றும் வகையில் வரலாற்று நிகழ்வாக அதை எடுத்துச் சொல்லி அதை ஓராண்டு நிகழ்வாக முன்னெடுக்கும் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் தமிழக முதல்வர்.  இதில் நம்முடைய உணர்வை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகியோர் வழியில் சமூக நீதி காத்த வீராங்கனையாக மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பின்தங்கிய மக்களுக்கு 69 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்று தந்தார். அதனுடைய அடித்தளமாக விளங்கியது தந்தை பெரியாருடைய கொள்கை தான் என்பதை நான் இங்கே பதிவு செய்து, மாண்புமிகு முதலமைச்சர் வெளியிட்டிருக்கிற இந்த சிறப்பு அறிவிப்பு வரலாற்றில் மிகப்பெரிய முக்கியத்துவத்தை பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதனை தேசிய விழாவாக நமது முதலமைச்சர் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது .அதை வரவேற்று மகிழ்கிறேன், நன்றி வணக்கம்” என பேசியுள்ளார். அவருடைய அருகில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்