‘சார் வாடகைக்கு வண்டி வேணும்’!.. ஆன்லைனில் புக் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சென்னையில் நடந்த நூதன மோசடி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் வாகனங்களை வாடகைக்கு விடுவதாக கூறி பணம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கார்த்திகேயன் என்பவர் வேலை செய்து வருகிறார். அந்த நிறுவனத்தில் இருந்து சில பொருட்களை வெளியூருக்கு கொண்டு செல்வதற்காக ஆன்லைனில் சரக்கு வாகனங்களை தேடியுள்ளார். அப்போது India Mart என்ற வர்த்தக தளத்தில், மகாபலிபுரம் பூஞ்சேரி என்ற முகவரில் விநாயாகா & கோ என்ற பெயரில் வாகனங்களை வாடகைக்கு விடும் விளம்பரத்தை பார்த்துள்ளார்.

இதனை அடுத்து அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு இரண்டு வாகனங்களை கார்த்திக்கேயன் புக் செய்துள்ளார். அப்போது முன்பணமாக ரூ.30,000 செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். உடனே அந்த பணத்தை கார்த்திக்கேயன் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்ட போது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திக்கேயன் அடையாறு துணை ஆணையர் விக்ரமனிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் அடையாறு சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர் ஐடிஐ படித்திருப்பதும், ஏற்கனவே திருவல்லிக்கேனி பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்படவே, போலியான நிறுவனத்தின் பெயரில் ஆன்லைன் மூலம் தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு சரக்கு வாகனங்களை வாடகைக்கு விடுவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் ரூ.7000 முன்பணத்தை செலுத்தி தனது போலி நிறுவனத்தை India Mart தளத்தில் விளம்பரம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ஜெயக்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த செல்போன், விசிட்டிங் கார்டுகள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கைதான ஜெயக்குமார் இதுபோல் வேறு யாரையும் ஏமாற்றி உள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News Credits: Puthiyathalaimurai

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்