'உன்னோட வாசம் கூட என்ன விட்டு போகல டா'... 'இந்த கொடுமையை பாக்கவா கல்யாணம் செஞ்சோம்'... காதல் மனைவி கண்ட கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இளம் வயதில் காதல் திருமணம் செய்து கொண்ட பலரும், பல்வேறு கனவுகளுடன் தங்களது வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள். ஆனால் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பே கனவுகள் நொறுங்கிப் போவது, சோகத்தின் உச்சம். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் சட்டாம்பட்டியை சேர்ந்தவர் மனோகர். இவருடைய மகன் ரஞ்சித் குமார். மோட்டார் சைக்கிள் மெக்கானிக் வேலை செய்து வரும் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கல்பனா என்ற இளம்பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. கல்பனா துணிக்கடையில் வேலை செய்து வரும் நிலையில், இருவரின் காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரிய வந்தது. பெற்றோரும் திருமணத்திற்குப் பச்சைக் கொடி காட்ட, கடந்த மே மாதம் 3-ந்தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணம் முடிந்த கையேடு புதுமண தம்பதியர் உறவினர்களின் வீட்டிற்கு விருந்திற்குச் சென்று வந்தனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரஞ்சித் குமார் போடிநாயக்கனூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு மனைவி கல்பனாவை விருந்திற்கு அழைத்துச் சென்றார். இருவரும் அங்குத் தங்கி விருந்து நிகழ்ச்சிகளை முடித்த பின்னர் தம்பதி இருவரும் போடிநாயக்கனூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு பேருந்தில் வந்தனர். திண்டுக்கல்லிலிருந்து தாராபுரத்துக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் இருவரும் தாராபுரத்துக்கு வந்த ஒரு சரக்கு ஆட்டோவில் ஏறி வந்தனர்.

பின்னர் இருவரும் மதியம் 1 மணி அளவில் தாராபுரம் அருகே இறங்கிக் கொண்ட நிலையில், அங்கிருந்து தம்பதி இருவரும் பேசிக் கொண்டே தாராபுரத்துக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்கள். இருவரும் தாராபுரம் அமராவதி ஆற்றுப் பாலத்திற்கு அருகே வந்த போது, ஆற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டு இருப்பதைப் பார்த்ததும் இருவரும் குளிக்க ஆசைப்பட்டனர். இதையடுத்து கல்பனா, கணவரிடம் முதலில் நீங்கள் ஆற்றுக்குள் இறங்குங்கள். பிறகு நான் இறங்குகிறேன் என்று கூறி இருக்கிறார்.

இதையடுத்து ஆற்றுக்குள் இறங்கிய ரஞ்சித் குமார் குளிக்க ஆரம்பித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகத் தண்ணீருக்குள் மூழ்கினார். அவர் குளிக்க இறங்கி பகுதி புதை மணல் பகுதி எனத் தெரியாமல் ரஞ்சித் குமார் இறங்கிய நிலையில், காப்பாற்றுங்கள் எனக் கையை மேலே தூக்கி சைகை காட்டியுள்ளார். அப்போது தான் தனது கண்முன்னே கணவர் ஆற்றில் மூழ்கியதைப் பார்த்து அதிர்ந்து போன கல்பனா, “காப்பாற்றுங்கள்'' எனக் கதறினார். கல்பனாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சிலர், உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தார்கள்.

தகவல் அறிந்த விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி ரஞ்சித் குமாரைத் தேடினார்கள். ஆனால் நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு ரஞ்சித் குமார் பிணமாக மீட்கப்பட்டார். ஆசையாக மணம் முடித்த கணவன், தனது கண்முன்பே இறந்ததைப் பார்த்த கல்பனா, ரஞ்சித்தின் சடலத்தைப் பார்த்துக் கதறி அழுதார். உன்னோட வாசம் கூட இன்னும் என்ன விட்டு போகலியே என, அந்த 21 வயது இளம் பெண் அழுதது, அங்கு நின்றிருந்தவர்களின் கண்களையும் குளமாக்கியது.

பையனுக்கு 23 வயது, பெண்ணுக்கு 21 வயது, ஆனால் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய இந்த இளம் வயதில், அதுவும் திருமணமான சில நாட்களில் புதுப்பெண் தனது கண்ணெதிரே காதல் கணவரை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்