‘ஒரு நொடி’ கவனக்குறைவால்... பள்ளிச் ‘சிறுவனுக்கு’ நேர்ந்த பரிதாபம்... புது ‘வீட்டின்’ கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட ‘சோகம்’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புது வீட்டின் கட்டுமானப் பணியின்போது எதிர்பாராதவிதமாக உடலில் மின்சாரம் பாய்ந்து பள்ளிச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

நெல்லை மாவட்டம் அப்புவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். சென்னையில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வரும் இவருக்கு ராகுல் எனும் 9ஆம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவர் உள்ளார். சுந்தர்ராஜனின் தம்பி அப்புவிளையில் சொந்தமாக வீடு கட்டிவரும் நிலையில், கட்டுமானப் பணியின்போது செங்கல் கட்டுமானத்தை தண்ணீரால் நனைப்பதற்காக அவர் அருகிலுள்ள உறவினர் வீட்டிலிருந்து மின்சாரத்தை எடுத்துப் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கட்டுமானப் பணியின்போது வீட்டில் மோட்டாரை இயக்குவதற்காக ராகுல் அங்கு சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள வீட்டிலிருந்து மின் இணைப்பை எடுத்துவந்து மின் மோட்டாரில் இணைப்பைக் கொடுத்துவிட்டு சுவிட்சை ஆன் செய்வதற்கு பதிலாக, ராகுல் சுவிட்சை ஆன் செய்தபடியே மின்வயரை எடுத்து வந்துள்ளார். அப்போது மின்கம்பியைக் கையில் ஏந்தியபடியே வந்தவருடைய கால்  எதிர்பாராதவிதமாக இடறியுள்ளது.

இதையடுத்து கீழே விழுந்துவிடாமல் இருக்க முயன்ற ராகுல் கையில் இருந்த மின்சார வயரை இறுக்கிப் பிடித்துள்ளார். அதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கவனக் குறைவு காரணமாக பள்ளிச் சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ACCIDENT, SCHOOLSTUDENT, TIRUNELVELI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்