வெடிக்கும் ‘தியேட்டர்’ விவகாரம்.. எதன் அடிப்படையில் 100% அனுமதி வழங்கப்பட்டது..? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பு தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பும், ஆதரவும் ஒருசேர எழுந்துள்ளது. அதில், திரைத்துறையினரை சேர்ந்த அரவிந்தசுவாமி, லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி போன்றோர் தியேட்டர்களில் 100 சதவீத அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து தியேட்டரில் 100 சதவீத அனுமதி, பெரும் ஆபத்தை விளைவிக்கும் என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. நேற்று சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த பிரபு என்பவர், தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி வழங்கியதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தியேட்டரில் 100 சதவீத அனுமதியை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று சென்னை திருவெற்றியூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி எதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதில், ‘தமிழகத்தில் கொரோனா பரவல் எந்த நிலையில் உள்ளது என்பது மருத்துவக் குழுவுக்கு தெரியும். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்ததால் வாழ்வாதாரம் மேம்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் குறைந்து வருகிறது. உருமாறிய கொரோனாவையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். இந்த அடிப்படையில் தான் 100 சதவீதம் தியேட்டர்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் தியேட்டர்கள் மருத்துவக் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை’ என அமைச்சர்  ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்