‘வண்டியை நிறுத்துங்க..!’.. வாக்குப்பதிவு இயந்திரத்தை ‘பைக்கில்’ எடுத்துச் சென்ற இருவர்.. சுற்றி வளைத்த மக்கள்.. வேளச்சேரியில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேளச்சேரியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரத்தை இருவர் பைக்கில் எடுத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று இரவு 7 மணியுடன் முடிவடைந்தது. இந்தநிலையில், நேற்று இரவு 7.30 மணியளவில் தரமணி நூறடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒரு விவிபேடு இயந்திரம் ஆகியவற்றை 2 நபர்கள் பைக்கில் எடுத்துச் சென்றுள்ளனர். இதை பின்னால் வந்த தனியார் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் பார்த்துள்ளார்.

இதனை அடுத்து அந்த ஊழியர்களிடம் வண்டியை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால், வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டுசென்ற இரண்டு பேரும் எந்தவித பதிலும் சொல்லாமல் வாகனத்தை வேகமாக ஓட்டிச்சென்றுள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த அந்த ஊழியர் சத்தமாக கூச்சலிட்டார். இதனை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இருசக்கர வாகனத்தை துரத்தி சென்று பிடித்தனர். பின்னர் அந்த 2 பேரிடமும் வாக்குப்பதிவு இயந்திரத்தை எங்கே எடுத்துச்செல்கிறீர்கள் என கேட்டனர். நாங்கள் மாநகராட்சி ஊழியர்கள், வாக்குப்பதிவு மையத்தில் இருந்து தலைமை அலுவலகம் நோக்கி செல்கிறோம் என்று ஒருவர் கூறினார். உடனே உங்களது அடையாள அட்டையை காட்டுங்கள் என பலரும் அவர்களிடம் கேட்க ஆரம்பித்தனர்.

இதனிடையே வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த வந்த தேர்தல் பறக்கும்படை, மாநகராட்சி அதிகாரிகள், காவல்நிலையத்துக்கு சென்று பிடிபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் மாநகராட்சி ஊழியர்கள் என்று கூறியுள்ளனர். வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்து போலீசாரின் பாதுகாப்புடன் பெரிய வாகனங்களில்  எடுத்துச்செல்வது தான் வழக்கம். ஆனால், இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துசென்றது ஏன்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விளக்கமளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ‘சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படவில்லை. தேர்தல் அலுவர்களின் தவறே காரணம். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும்’ என கூறினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்