ஐயா.. என் வீட்டை காணோம்யா! பழையபடி ஊரில் வந்து வாழலாம் என கிளம்பி வந்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கன்னியாகுமரி: வைகைப்புயல் வடிவேலு ஒரு  கிணற்றை காணவில்லை என போலீசாரிடம் முறையிடும் காமெடி பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் அதே போன்று, மார்த்தாண்டம் அருகே வீட்டை காணவில்லை என கூறி மகளுடன் அம்மா ஒருவர் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

மார்த்தாண்டம் அருகேயுள்ள புளியவிளாகம் பகுதியை சேர்ந்தவர் லபிலாபல்ஸ் (60). இவருடைய மனைவி தெரசா (60). இவர்களுக்கு ஜெனிபர் என்ற மகள் உள்ளார்.

வீட்டு வாடகை செலுத்த முடியாமல் தவிப்பு:

லபிலாபல்ஸ் புளியவிளாகத்தில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுள்ளார். அங்கு வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் லபிலாபல்ஸ் திடீரென மாரடைப்பின் காரணமாக இறந்து போயுள்ளார். அதன் பிறகு வீட்டு வாடகை செலுத்த முடியாமல் வறுமையில் தெரசா தவித்தார்.

சொந்த ஊரில் வாழலாம்:

இதன் காரணமாக சொந்த ஊரில் உள்ள வீட்டில் தங்கி வாழலாம் என தெரசா முடிவு செய்துள்ளார். அதன்படி தெரசா, மகளுடன் புளியவிளாகத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார். ஆனால் அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அவர்கள் குடியிருந்த இடத்தில் இருந்த அவர்களது வீட்டை காணவில்லை.

வீட்டை காணவில்லை:

அவரது வீடு இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் போடப்பட்டு இருந்தது. எங்கே தனது வீடு என குழம்பி போனார். மேலும் அந்த இடத்தில் உறவினர் ஒருவர் வீடு கட்டிக் கொண்டிருந்தார்.

பின்னர் மகள் ஜெனிபருடன் தெரசா தனது வீட்டை காணவில்லை என கூறி திடீரென அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதன்காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

போலீசார் பேச்சுவார்த்தை:

இதுபற்றி தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் கூறியதை தொடர்ந்து தெரசாவும், ஜெனிபரும் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.

MARTHANDAM, HOUSE, காணவில்லை, வீடு, மார்த்தாண்டம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்