'கொஞ்சம் பொறுங்க அவரு வரட்டும்'... 'கழுத்தில் தாலி ஏறும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்'... 'காரணத்தை கேட்டு ஆடிப்போன மாப்பிள்ளை'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கும் கோத்தகிரி அருகே உள்ள தூனேரி கிராமத்தைச் சேர்ந்த பிரியதர்சினி என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது கொரோனா காரணமாகப் பல விதிமுறைகள் அமலில் இருப்பதால் திருமணத்தை எளிமையாக நடத்த இருவீட்டாரும் முடிவு செய்தார்கள். அதன்படி திருமண சடங்குகள் ஆரம்பித்த நிலையில், மணிமேடையில் மணமக்கள் இருவரும் அமர்ந்திருந்தனர்.

அப்போது அவர்களின் குடும்ப சம்பிரதாயப்படி, மணிமேடையில் மணமகன், மணமகளிடம் தாலி கட்டுவதற்கு முன் திருமணம் செய்து கொள்ளச் சம்மதமா எனக் கேட்க வேண்டும். மணப்பெண் சம்மதம் என்று சொன்னவுடன் மட்டுமே மணமகன் தாலியைக் கட்ட முடியும். அதன்படி மணமகன் மணப்பெண்ணிடம் என்னைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதமா? என இருமுறை கேட்கும்பொழுது மௌனமாக இருந்த மணப்பெண், மூன்றாவது முறை கேட்கும்போது எனக்கு சம்மதமில்லை என தெரிவித்தார்.

இந்த பதிலைக் கொஞ்சமும் எதிர்பாராத மணமகன் அதிர்ந்து போனார். பின்னர் “என்னைத் திருமணம் செய்து கொள்ள என் காதலன் வருகிறார். ஒரு மணி நேரம் பொறுங்கள். அவர் எனக்காக அவரது திருமணப் பந்தத்தை முறித்துக் கொண்டவர். அவரது குழந்தைகளை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்குத் துரோகம் செய்தது போல் ஆகிவிடும்.

எனவே எனக்கு இந்த திருமணம் வேண்டாம்” எனக் கூறி அங்கிருந்து செல்ல முயன்றார். இங்கு என்ன நடக்கிறது எனப் புரியாமல் மாப்பிள்ளை பரிதவிப்பில் நின்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த பெண்ணின் குடும்பத்தினர் அந்த பெண்ணை கண்டித்ததோடு, தாக்க முயற்சி செய்தனர். ஆனால் அச்சமின்றி அந்த மணப்பெண் மண மேடையிலிருந்து எழுந்து சென்றார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பெண்ணின் முழு சம்மதத்தைப் பெற்றோர் பெற்றிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் தற்போது பரிதாபமாக மாப்பிள்ளையாக வந்த இளைஞர் தான் பரிதவிப்பில் சிக்கிக் கொண்டுள்ளார் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்