'நாம் தமிழரில் அதிரடி காட்டிய மன்சூர்'...'திடீரென சீமானோடு ஏற்பட்ட மனவருத்தம்'... புதிய அவதாரம் எடுத்த மன்சூர் அலிகான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாம் தமிழர் கட்சியில் அதிரடி காட்டிய மன்சூர் அலிகான், தற்போது அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

சீமான் நாம் தமிழர் என்கிற கட்சியைத் தொடங்கி, பல தேர்தல்களில் , தனியாக நின்று தேர்தலைச் சந்தித்து வருகிறார். சீமானின் பேச்சாற்றல் பல இளைஞர்களைக் கவர்ந்த நிலையில் பலரும் சீமானைப் பின்பற்றத் தொடங்கினார்கள். அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் பழகியது குறித்த தனது பதிவுகளை மேடையில் பேசியதை வைத்துப் பலரும் விமர்சித்து வருவதும் வாடிக்கையாக உள்ளது.

இதனிடையே சீமானின் பேச்சால் ஈர்க்கப்பட்டு இணைந்த இன்னொரு பிரபலம் நடிகர் மன்சூர் அலிகான். இவர் தீவிர மொழிப்பற்று மிக்கவர். இலங்கைத் தமிழர்கள் மீது பற்று கொண்டவர். இவர் நாம் தமிழர் கட்சியில் இணைந்த பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார்.

மற்ற அரசியல் தலைவர்களின் பிரச்சார உத்தியிலிருந்து வேறுபட்ட மன்சூர் அலிகானின் பிரச்சாரம் பல மக்களைக் கவர்ந்தது. இதனால் அந்தத் தேர்தலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். அந்த வகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட மன்சூர் அலிகான் ஆசைப்பட்டதாகவும், அதற்கு அவரது கோரிக்கையைச் சீமான் பரிசீலிக்கவும் இல்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். எப்போதும் அதிரடிக்குப் பெயர் போன மன்சூர் அலிகான், புதிதாகக் கட்சியையும் தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்குத் தமிழ்த் தேசிய புலிகள் எனப் பெயரிட்டுள்ள மன்சூர் அலிகான், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்