'பார்சலை கொடுத்துவிட்டு நைசா நழுவ பார்த்த டெலிவரி பாய்'... 'போன் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த ஷாக்'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மகளின் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் ஆர்டர் செய்த நபருக்கு பார்சலை திறந்த திறந்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகளின் ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்க வேண்டும் என பல மாடல்களை பார்த்து கொண்டு இருந்துள்ளார். அப்போது எதேச்சையாக முகநூலில் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் 12,000 ரூபாய் மதிப்புடைய செல்போனை 2999 ரூபாய்க்குத் தருவதாக பதிவிடப்பட்டிருந்தது. இதையடுத்து மகளின் ஆன்லைன் வகுப்பிற்குத் தேவைப்படும் என்பதற்காக அந்த செல்போனை ஆடர் செய்துள்ளார்.

இதையடுத்து 6 நாள்களுக்குப் பிறகு ஆர்டர் செய்த பார்சல் வீட்டிற்கு வந்த நிலையில், பணத்தைக் கொடுத்து விட்டு பார்சலை பிரித்து பார்க்குமாறு டெலிவரி பாய் கூறியுள்ளார். ஆனால் பிரித்துப் பார்த்து விட்டுத் தான் பணத்தைத் தருவேன் என கூறிய முகமது அலி, பார்சலை பிரித்து பார்த்துள்ளார். அப்போது மகளுக்கு ஆசையாக செல்போன் ஆர்டர் செய்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலில் செல்போனிற்கு பதிலாக 2 சீட்டுக்கட்டு இருந்துள்ளது. அந்த நேரம் பார்த்து டெலிவரி பாயோ, பார்சலுக்கும் டெலிவரிக்கும் சம்பந்தமில்லை எனக்கூறி அங்கிருந்து நழுவ முயன்றுள்ளார்.

உடனே அங்கிருந்தவர்கள் உதவியுடன் டெலிவரி பாயை மடக்கி பிடித்த முகமது அலி, அவரை பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் டெலிவரி பாயிடம் விசாரணை நடத்தியதில், தங்களுக்கு வந்த பார்சலை டெலிவரி செய்வது மட்டுமே எங்கள் வேலை' என்று தெரிவித்துள்ளார்.  பிறகு, டெலிவரி பாய் வேலை பார்த்த நிறுவனத்தின் விலாசம், போன் எண், செல்போன் எண்களை வாங்கி விட்டு போலீசார் அவரை அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே ஆன்லைனில் இதுபோன்ற மோசடிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் கூறியுள்ளார்கள். இதுபோன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்கள். மகளின் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் ஆர்டர் செய்த நபருக்கு சீட்டுக்கட்டு வந்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்