‘ஆசை’ வார்த்தை கூறி ‘லட்சக்கணக்கில்’ மோசடி... ஏமாந்தவரிடம் ‘தானாக’ வந்து வசமாக ‘சிக்கிய’ நபர்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரையில் தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் வசமாக சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

மதுரையில் உள்ள அயன் கேஸ் ஏஜென்சியில் முகவராக வேலை செய்துவந்த செல்வராஜ், அதன் வாடிக்கையாளர்களிடம் தான் தீபாவளி சீட்டு ஒன்று நடத்துவதாகவும், அதில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் எனவும் ஆசை காட்டியுள்ளார். அதை நம்பிய பலரும் தாங்கள் சீட்டில் சேர்ந்தது மட்டுமில்லாமல், தங்களுடைய உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களையும் அதில் சேர்த்து விட்டுள்ளனர். இதையடுத்து அக்டோபர் முதல் வாரத்தில் ஏலச்சீட்டை எதிர்பார்த்து பணம் செலுத்தியவர்கள் காத்திருக்க, செல்வராஜ் செல்ஃபோனை ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்வராஜைத் தேடி வந்துள்ளனர்.

இதற்கிடையே செல்வராஜிடம் பணம் செலுத்தியவர்களில் ஒருவரான உணவக உரிமையாளர் நடராஜன் என்பவர் தனக்கு தெரிந்த பலரையும் அந்த சீட்டில் சேர்த்துவிட்டிருந்த நிலையில், செல்வராஜ் தலைமறைவானதும் நம்பி பணம் செலுத்தியவர்கள் நடராஜனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து தனது உணவகத்தை விற்று நடராஜன் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை கொடுத்துவிட்டு, தற்போது தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தலைமறைவாகியிருந்த செல்வராஜ், நடராஜின் தள்ளுவண்டி கடைக்கு இரவு உணவு வாங்க வந்துள்ளார். அப்போது அவரை அடையாளம் கண்டுகொண்ட நடராஜின் மனைவி அவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். தற்போது அவரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MADURAI, MONEY, CHITFUND, FRAUD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்