"எனக்கும் சுத்தமா முடியலைங்க... பையன பாத்துக்கவும் ஆளில்ல..." கலங்கி நின்ற 'தாய்'... கைகொடுத்து உதவிய 'மதுரை' கலெக்டர்... குவியும் 'பாராட்டு'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை மாவட்டம் ஆனையூர் பகுதியை அடுத்த கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி பெயர் மாரீஸ்வரி.

இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், மகளும் இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் அவரது மகள் உயிரிழந்துள்ளார். மற்றொரு மகனான பழனிகுமார் (வயது 21) பிறவிலேயே, வாய் பேச முடியாமலும், நடக்க முடியாமலும் மாற்றுத்திறனாளியாக இருந்து வருகிறார். 

காளிமுத்து மற்றும் மாரீஸ்வரி ஆகியோர் கூலித் தொழிலாளர்களாக இருந்து வரும் நிலையில், அவர்களுக்கு கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டு தங்களது மாற்றுத்திறனாளி மகன் பழனிகுமாரை கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில், மாரீஸ்வரிக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, தனக்கும் தனது மகனுக்கும் மருந்து மாத்திரை வாங்கக் கூட, போதிய பணமின்றி தவித்து வந்துள்ளார்.

அது மட்டுமில்லாமல், அவரது கணவர் காளிமுத்துவும் குடி பழக்கத்திற்கு அடிமையானதால், அவராலும் குடும்பத்திற்கு உதவி செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, நடக்க முடியாத தனது மகனை யாரை நம்பியும் வீட்டில் விட்டுச் செல்ல முடியாமல், எங்கு சென்றாலும் தனது மகனை இடுப்பிலேயே தூக்கிக் கொண்டு சென்றுள்ளார்.

குடும்ப சூழ்நிலையின் காரணமாக, கடுமையாக அவதிப்பட்டு வந்த மாரீஸ்வரி, ரத்த புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்டுள்ள தன்னால், தனது 21 வயது மகனை தூக்கிச் செல்ல முடியவில்லை என்றும், இருசக்கர வாகனம் ஒன்றை அரசு வழங்கினால், பேருதவியாக இருக்கும் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் சில மாதங்களுக்கு முன் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தனது சொந்த செலவிலேயே இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கி மாரீஸ்வரிக்கு அளித்துள்ளார். அது மட்டுமில்லாமல், மாரீஸ்வரி மகன் பழனிகுமாரை உட்கார வைத்துச் செல்லும் வகையிலான சீட் பெல்ட் ஒன்றை பிரத்யேகமாக வடிவமைத்து வழங்கியுள்ளார்.

மேலும், அந்த வாகனத்தில் பழனிகுமாரை உட்கார வைத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், ஒரு ரவுண்டு ஓட்டி பழனிகுமாரை உற்சாகப்படுத்தினார் ஆட்சியர். மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு மாரீஸ்வரியும், அவரது மகன் பழனிகுமாரும் உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்தனர். ஆட்சியர் அன்பழகனின் செயலுக்கு மக்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்